ஆபத்தான சமூக ஊடகக் கொள்கை

முகநூல், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்களை நிர்வகிக்கும் நிறுவனமான ‘மெட்டா பிளாட்பார்ம் இங்க்’,  உக்ரைன் ரஷ்யா போரையடுத்து தனது செயல்பாடுகளை ரஷ்யாவில் தற்காலிகமாக நிறுத்தியது. ரஷ்யாவும் இவற்றை தடை செய்தது. இதயடுத்து தற்போது, ரஷ்ய அதிபர் புதின், ரஷ்யர்கள், ரஷ்ய வீரர்களுக்கு எதிராக வன்முறை செய்திகளை பதிவிட அதன் பயனர்களுக்கு தற்காலிக அனுமதி வழங்கியுள்ளது. குறிப்பாக உக்ரைன் மற்றும் ரஷ்யாவின் அண்டை நடுகளான ஆர்மீனியா, அஜர்பைஜான், எஸ்டோனியா, ஜார்ஜியா, ஹங்கேரி, லாட்வியா, லிதுவேனியா, போலந்து, ருமேனியர்களுக்கு இந்த தற்காலிக கொள்கை மாற்றங்கள் பொருந்தும் என்று தெரிவித்துள்ளது.

ராய்ட்டர்ஸ், தி இன்டர்செப்ட் போன்ற பத்திரிகைகளும்மெட்டாவின் இந்த செயல்பாட்டை உறுதிபடுத்தியுள்ளன. இதனையடுத்து ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதின் அல்லது பெலாரஷ்ய அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோ போன்றோருக்கு எதிராக பலர் முகநூலில் கொலை மிரட்டல்கள் விடுத்துள்ளனர். ரஷ்யாவில் வன்முறையை தூண்டும் பதிவுகளை பதிப்பித்து வருகின்றனர். இந்த விவகாரம் தற்போது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மெட்டாவின் இந்த செயல்பாடு நமது நாட்டுக்கு ஒரு பெரிய உண்மையை உணர்த்தியுள்ளது என்றால் அது மிகை அல்ல. ஏற்கனவே டுவிட்டர், முகநூல், இன்ஸ்டாகிராம் போன்ற பல சமூக ஊடக நிறுவனங்கள் நமது நாட்டில் பிரிவினைவாதிகளுக்கு ஆதரவாகவும் தேசத்திற்கெதிராகவும் மறைமுகமாக செயல்பட்டு வருகின்றன. இடதுசாரி சித்தாந்தம், பிரிவினைவாத சித்தாந்தம் கொண்டவர்கள் தான் இந்த சமூக ஊடக நிறுவனங்களில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். மத்திய அரசின் சட்ட திட்டங்களை அவர்கள் மதிப்பதில்லை என்பதற்கு பல முன்னுதாரணங்கள் உள்ளன. இந்நிலையில், இதுபோன்ற வெளிநாட்டு நிறுவனங்கள் வருங்காலத்தில் நமது நாட்டிற்கெதிராக திரும்பவும் பாரதத்தில் வன்முறையை ஊக்குவிக்கவும் நேரடியாகவே ஏன் முயலாது? அதனை தடுக்க வழி என்ன? என்பதை நமது மத்திய அரசு சிந்தித்து தற்போதே முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்.

மதிமுகன்