பயிர் காப்பீடு திட்டம் சாதனை

பாரத சுதந்திரத்தின் 75வது ஆண்டை கொண்டாடும் அம்ரித் மகோத்சவத்தின் ஒரு பகுதியாக பயிர் காப்பீடு வாரம் தொடங்கப்பட்டுள்ளது. இதில் பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்துக்காக விழிப்புணர்வு பிரச்சாரம் துவக்கிவைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், ‘ஒவ்வொரு விவசாயிக்கும் பாதுகாப்பு அளிப்பதுதான் பஸல் பீமா யோஜனா என்ற பயிர் பாதுகாப்பு திட்டத்தின் நோக்கம். இந்த காப்பீடு திட்டம் மூலம் விவசாயிகள் 95 ஆயிரம் கோடி ரூபாயை இழப்பீடாகப் பெற்றுள்ளனர். பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்தை அமல்படுத்துவதில் மாநில அரசுகள் மற்றும் காப்பீடு நிறுவனங்களுக்கு முக்கிய பங்கு உண்டு. கடந்த 4 ஆண்டுகளில், விவசாயிகள் பயிர் காப்பீடு பிரீமியமாக ரூ. 17 ஆயிரம் கோடி செலுத்தியுள்ளனர். ஆனால் இழப்பீடாக அவர்களுக்கு ரூ. 95 ஆயிரம் கோடி வழங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை மேலும் விரிவுபடுத்த வேண்டும். அப்போதுதான் அதிக விவசாயிகள் பலன் அடைவர்’ என்று கூறினார்.