இலவச சிகிச்சைக்கு மதமாற்றம்

கர்நாடகத்தைச் சேர்ந்த ஒரு ஹிந்துக் குடும்பத்தினரின் 3 வயது மகன் தலசீமியா நோயால் பாதிக்கப்பட்டான். இந்த நோய் அரிதானது, விலையுயர்ந்த மருந்தும் சிகிச்சையும் இதற்கு தேவை. தாபா தொழிலாளியான இரண்ணா நாகூரால் அவரது ரூ. 12,000 மாத வருமானத்தை கொண்டு குடும்பத் தேவைகளையும் மருத்துவச் செலவையும் சமாளிக்க முடியவில்லை. எனினும், அவர் மகனின் சிகிச்சைக்காக ரூ. 3 லட்சத்தை செலவிட்டார். இந்நிலையில், வேலூரில் உள்ள பிரபல கிறிஸ்தவ மிஷனரி மருத்துவமனை ஒன்று, அவரது மகனுக்கு ஆகும் மருத்துவ செலவை தாங்களே ஏற்பதாகவும் அதற்கு அக்குடும்பத்தினர் கிறிஸ்தவராக மதம் மாறவேண்டும் என்றும் வற்புறுத்தியது. வேறு வழியின்றி மகனை காக்க மதம் மாற சம்மதித்தார் இரண்ணா நாகூர். நல்லவேளையாக இரண்ணாவின் நிலைமை குறித்து அறிந்த காங்கிரஸ் எம்.எல்.ஏவான எம்.பி பாட்டீல், கர்நாடக மாநிலம் விஜயபுராவில் உள்ள பி.எல்.டி.இ மருத்துவமனை நிர்வாகத்திற்கு இலவச சிகிச்சை அளிக்க கூறியதால், அவர்கள் மதமாற்ற சதியில் இருந்து தப்பித்தனர். இந்த செய்தியை வெளியிட்ட இந்தியன் எக்ஸ்பிரஸ், அந்த பிரபல கிறிஸ்தவ மிஷனரி மருத்துவமனையின் பெயரை வெளியிடவில்லை என்றாலும் அதனை யூகிப்பது அவ்வளவு ஒன்றும் கடினமானதல்ல.