மனோ தங்கராஜுக்கு கண்டனம்

கடந்த ஞாயிற்றுக் கிழமை டெல்லியில் புதிய நாடாளுமன்றத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி. அப்போது திருவாவடுதுறை ஆதினம் கொடுத்த செங்கோலை பெற்றுக்கொண்ட பிரதமர், செங்கோலுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தினார். செங்கோல் முன்பு சாஷ்டங்கமாக விழுந்து வணங்கினார். பின்னர் அதனை புதிய நாடாளுமன்றத்தின் சபாநாயகர் இருக்கைக்கு அருகில் வைத்தார். இந்நிலையில் பிரதமர் மோடி செங்கோல் முன்பு சாஷ்டங்கமாக விழுந்து வணங்கியதை தரக்குறைவாக விமர்சனம் செய்தார் தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ். மோடியின் போட்டோவை தனது சமூக ஊடகப் பக்கத்தில் பகிர்ந்த அவர், மூச்சு இருக்கா? மானம்? ரோஷம் என பதிவிட்டிருந்தார். அமைச்சர் மனோ தங்கராஜின் இந்த பதிவுக்கு நாடெங்கிலும் இருந்து கடும் எதிர்ப்பு எழுந்தது. பா.ஜ.கவினர் உள்ளிட்ட பல கட்சியினரும் மனோ தங்கராஜை கடுமையாக விமர்சித்தனர். பொது மக்களும் அவருக்கு கண்டனம் தெரிவித்தனர். எதிர்ப்புகள் மிகக் கடுமையாக எழுந்ததால் அதிர்ச்சியடைந்த அமைச்சர் சத்தமில்லாமல் தனது சர்ச்சைக்குரிய பதிவை நீக்கினார். இந்நிலையில் மனோ தங்கராஜின் பதிவுக்கு முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளதுடன் அவரை கடுமையாகவும் விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “இதை எழுதியவருக்கு அறிவிருக்கிறதா? இவரது செருப்பே துடிக்கும் இவரை அடிக்க. ஊரை அடித்து உயிர் பிழைப்போருக்கு செங்கோலையும் அதை மதிப்பவரைப் பற்றியும் என்ன தெரியும்? செங்கோல் – அறம் (மதம் அல்ல) சார்ந்த ஆட்சியின் சான்று. அனைவரையும் சமமாக மதிக்கும் பண்பு அணு அளவும் பொதுப் பணத்தை திருடா தன்மை செங்கோலுக்கு சரண் என்றால் செம்மைக்கு சரண், செந்தமிழுக்கும் தமிழர் பண்புக்கும் சரண். ஆணவம் தலைக்கேறி நிற்கும் அமைச்சரை, அரசை தர்மம் தண்டிக்கும். தண்டமிட்டு வணங்கிய பிரதமரை தமிழர் போற்றுவர், தர்மம் வழி நடத்தும்” என கூறியுள்ளார்.