ஆவின் பாலகம் அமைக்க லஞ்சம்

சேலம் மாநகரப் பகுதியைச் சேர்ந்தவர் குணசேகரன். இவர், சேலம் அரசு தலைமை மருத்துவமனையில் கடந்த 8 ஆண்டுகளாக கேண்டீன் நடத்தி வருகிறார். அதே மருத்துவமனையில் ஆவின் பாலகம் அமைக்க அனுமதி கோரி விண்ணப்பித்திருந்தார். இதற்காக தி.மு.கவின் சேலம் மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளராக இருக்கும் அன்னதானப்பட்டியைச் சேர்ந்த சந்திரசேகரன், ஆவின் பாலகம் அமைக்க தான் அனுமதி வாங்கித் தருவதாகவும் அதற்கு 5 லட்சம் ரூபாய் லஞ்சம் தர வேண்டும் என்றும் கேட்டார். குணசேகரனும் முன்பணமாக 2.50 லட்சம் ரூபாயை அன்னதானப்பட்டிக்குச் சென்று சந்திரசேகரனிடம் கொடுத்தார். ஆனால், ஆவின் பாலகம் அமைக்கும் ஒப்பந்தம் ஏற்கனவே நிறைவடைந்ததால், சந்திரசேகரன் அனுமதி பெற்றுத் தரவில்லை. இதனால், தான் கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்டார் குணசேகரன். ஆனால், பணத்தை தர மறுத்தார் சந்திரசேகரன். இதைத் தொடர்ந்து, அன்னதானப்பட்டி காவல்நிலையத்தில் சந்திரசேகரன் மீது குணசேகரன் புகார் அளித்தார். எனினும், சந்திரசேகரன் மாவட்ட தி.மு.க. வழக்கறிஞர் அணி அமைப்பாளராக இருப்பதாலும், அவரது தந்தை ஜி.கே. சுபாஷ் மாவட்ட தி.மு.க. அமைப்பாளராக இருப்பதாலும் சந்திரசேகரன் மீது வழக்குப் பதிவு செய்யவில்லை என்று கூறப்படுகிறது. இதனிடையே, சந்திரசேகரன் லஞ்சம் வாங்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.