பி.பி.சிக்கு கண்டனம்

இங்கிலாந்து அரசின் தொலைகாட்சியான பி.பி.சி திட்டமிட்டு அவதூறு பரப்பும் வகையில், பிரதமர் மோடிக்கு எதிராக ஆவணப்படம் வெளியிட்டது. இதற்கு இங்கிலந்து பிரதமர் ரிஷி சுனக் உள்ளிட்ட பல தலைவர்களும் பொதுமக்களும் கண்டன தெரிவித்து வருகின்றனர். இந்த சூழலில், பி.பி.சிக்கு கண்டனம் தெரிவித்து பிரபல திரைப்பட இயக்குநர் சேகர் கபூர் வெளியுட்டுள்ள டுவிட்டர் பதிவில், “கடந்த 1947ம் ஆண்டு பாரத சுதந்திர போராட்டத்தின் போது, இங்கிலாந்து முன்னாள் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் பேசுகையில்,  பாரதத் தலைவர்கள் அனைவரும் திறன் குறைந்தவர்கள், பலவீனமானவர்கள் என்று பேசினார். அவர் மீதும் பலதரப்பட்ட விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன. வின்ஸ்டன் சர்ச்சிலைப் பற்றிய உண்மைகளை சொல்ல பி.பி.சிக்கு எப்போதாவது தைரியம் இருந்ததா என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. வங்கப் பகுதியில் ஏற்பட்ட மிகப்பெரிய பஞ்சத்துக்கு அவர் தான் காரணம். லட்சக்கணக்கான மக்களின் உயிரிழப்புக்கு காரணம் அந்த பஞ்சம்தான். அதை ஏற்படுத்தியவர் சர்ச்சில். அப்பகுதியில் வசித்த குர்துகள் எனப்படும் பழங்குடியினர் மீது ரசாயன குண்டுகளை வீசிய முதல் நபர் வின்ஸ்டன் சர்ச்சில்தான்” என தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ள மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ, ”பாரதத்தில் உள்ள சிறுபான்மை சமூகம் உள்பட அனைத்து சமூகங்களும் நேர்மறையான எண்ணத்துடன் முன்னோக்கிச் சென்றுகொண்டிருக்கின்றன. நாட்டிற்கு உள்ளே இருந்து கொண்டும் வெளியே இருந்து கொண்டும் மேற்கொள்ளப்படும் இழிவான பிரச்சாரங்களால் நாட்டின் புகழுக்கு களங்கம் ஏற்பட்டுவிடாது. நாட்டில் உள்ள 140 கோடி மக்களின் ஒற்றைக் குரலாக நரேந்திர மோடியின் குரல் உள்ளது. காலணி ஆதிக்கத்திற்கு ஆதரவான மனோபாவம் பாரதத்தில் உள்ள சிலருக்கு இன்னமும் உள்ளது. அவர்கள், உச்ச நீதிமன்றத்தைவிட பி.பி.சியை உயர்வானதாகக் கருதிக்கொண்டு உள்ளனர். அந்நிய சக்திகளை திருப்திப்படுத்தும் நோக்கில் அவர்கள்  தேசத்தின் புகழுக்கு களங்கள் விளைவிக்க முயல்கிறார்கள். நாட்டை பலவீனப்படுத்த வேண்டும் என்பது மட்டுமே இவர்களின் ஒரே நோக்கமாக உள்ளது” என விமர்சித்துள்ளார். இதேபோல பாரதத்தின் உளவு அமைப்பான ராவின் முன்னாள் தலைவர் சஞ்சீவ் திருப்பதியும் பிபிசியின் இந்த ஆவணப்படத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.