முரசொலிக்கு கண்டனம்

‘துக்ளக்’ இதழ் ஆண்டு விழாவின்போது அதன் ஆசிரியர் குருமூர்த்தி பேசுகையில், ‘முதல்வரின் ஓசி பஸ் பயணம் தான் திராவிட மாடலா?’ என, கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளிக்கும் விதமாக முரசொலி இதழில் இம்மாதம் 17ம் தேதி, ‘தட்சணையில் வாழக்கூடிய கூட்டத்தின் பிரதிநிதியான குருமூர்த்தி, ஓசியை பற்றி பேசலாமா?’ என்று பிராமண சமுதாயத்தை இழிவுபடுத்தி கருத்து வெளியிட்டது. இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனங்கள் எழுந்தன. இந்நிலையில், ‘பிராமணர்கள் உழைப்பால், நேர்மையால், கடவுள் பக்தியால், தேச பக்தியால் உயர்ந்தவர்கள். தி.மு.க., தலைவர்கள், கடவுள் மறுப்பை பற்றி பேசுவர். அவர்களது குடும்பத்தினர் பரிகார பூஜை, அபிஷேகம் என்று கோயில் கோயிலாக செல்வார்கள். எதற்கெடுத்தாலும் பிராமண சமூகத்தை இழிவு செய்வது இவர்களது வாடிக்கை. இவர்கள் நடத்தும் கம்பெனிகளுக்கு பிராமணர் ஆடிட்டர்; குடும்ப வைத்தியராக பிராமண டாக்டர்கள்; கோர்ட்டில் வாதாட பிராமண வக்கீல் அமர்த்திக் கொள்வதுதான் இவர்கள் வழக்கம். சபை நாகரிகம் கருதி, பல கசப்பான உண்மைகளை கூற விரும்பவில்லை. முரசொலி பத்திரிக்கை தன் இழிவான விமரிசனத்திற்கு மன்னிப்பு கேட்க வேண்டும்; வருத்தம் தெரிவிக்க வேண்டும்’ என்று தமிழ்நாடு பிராமணர் சங்க மாநில தலைவர் பம்மல் ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.