முதல்வர் மகளின் முன்னாள் ஆடிட்டர் கைது

டெல்லியை ஆளும் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு, மதுபானங்களுக்கான கலால் வரிக்கொள்கையில் மாற்றம் செய்தது. இதன்மூலம் மதுபான தயாரிப்பாளர்கள், விற்பனையாளர்கள் மூலம் பல கோடி ரூபாய் லாபம் அடைந்ததாக கண்டுபிடிக்கப்பட்டது. இந்த லாபத்திற்கு பிரதிபலனாக ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த விஜய் நாயரிடம் ரூ.100 கோடி வழங்கப்பட்டது என்றும் அதில் ரூ. 30 கோடி, ஹவாலா பணம் என்றும் தகவல் வெளியானது. இதையடுத்து, டெல்லி துணைநிலை ஆளுநர் வினய் சக்சேனா இதனை விசாரிக்க மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு பரிந்துரைத்தார். பின்னர், இந்த வழக்கு கடந்த ஆண்டு அக்டோபரில் சி.பி.ஐ மற்றும் அமலாக்கத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் ஆம் ஆத்மி கட்சியின் ஊடகப் பிரிவு தலைவர் விஜய் நாயர், தொழிலதிபர் அபிஷேக் பொயின்பாலி உள்ளிட்டோர் ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ளனர். சிலர் இதில் ஜாமீனில் உள்ளனர். முக்கிய குற்றவாளியாக டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா சேர்க்கப்பட்டுள்ளார். மேலும், இவ்வழக்கின் குற்றப்பத்திரிகையில், கெஜ்ரிவால், முன்னாள் எம்.பியும் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவின் மகளுமான கவிதா, ஆந்திராவின் ஆளும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் எம்.பி மாகுண்ட ஸ்ரீனிவாசலு ரெட்டி, தொழிலதிபர்கள், டெல்லி அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் பெயர்களும் சேர்க்கப்பட்டுள்ளன. இவ்வழக்கின் விசாரணைக்காக, கடந்த செவ்வாய்க்கிழமை, கவிதாவின் முன்னாள் ஆடிட்டர் புச்சிபாபு கொரண்ட்லா என்பவரை சி.பி.ஐ அழைத்தது. விசாரணையில் அவர் சி.பி.ஐக்கு ஒத்துழைப்பு வழங்காமல் முரண்டு பிடித்ததால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர், டெல்லி கலால் வரி ஊழலில் தொடர்புடைய தென்மாநிலக் குழு தொழிலதிபர்களுக்கு உதவியதாக புகார் உள்ளது.