ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்துக்கு அனுமதி கோரிய வழக்கு

விஜயதசமியை முன்னிட்டு தேசமெங்கும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் சார்பில் அணிவகுப்பு ஊர்வலம் நடைபெறும். அவ்வகையில், தமிழகத்தில் சென்னை, விழுப்புரம், ஸ்ரீவில்லிபுத்தூர் உள்ளிட்ட ஒன்பது இடங்களில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் அணிவகுப்பு ஊர்வலத்திற்கு அனுமதி கோரி தமிழக உள்துறை அமைச்சகம் மற்றும் டிஜிபியிடம் கடந்த மாதம் மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவின் மீது இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. எனவே அணிவகுப்பு ஊர்வலத்துக்கு அனுமதி வழங்க கோரி இந்த 9 இடங்களைச் சேர்ந்த ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகள் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், “அணிவகுப்பு ஊர்வலத்தை ஒழுங்குபடுத்த மட்டுமே காவல்துறைக்கு அதிகாரம் உள்ளது. அனுமதி மறுக்க காவல்துறைக்கு அதிகாரமில்லை. ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் ஊர்வலத்திற்கு அனுமதி வழங்கப்படும் நிலையில் தமிழகத்தில் மட்டும் அனுமதி மறுக்கப்படுகிறது” என்று கூறப்பட்டிருந்தது. இந்த மனு நீதிபதி இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “அணிவகுப்பு ஊர்வலத்திற்கு அனுமதி கோரிய மனு குறித்து வரும் 22-ம் தேதி முடிவெடுத்து தெரிவிக்கப்படும்” என்று தெரிவித்தார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, இந்த மனுவுக்கு தமிழக அரசு மற்றும் காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தார்.