ஸ்ரீராமஜென்ம பூமிக்கு வெடிகுண்டு மிரட்டல்

அயோத்தியில் உள்ள ஸ்ரீராம ஜென்ம பூமியில் பிரமாண்டமாக ஸ்ரீராமர் கோயில் வேகமாக கட்டப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கோயில் கட்டப்படும் ஸ்ரீராமஜென்ம பூமி வளாகத்தை குண்டு வைத்து தகர்க்கப்போவதாக கூறி மர்ம நபர் ஒருவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார். அயோத்தியின் ராம்கோட் பகுதியில் வசித்து வரும் மனோஜ் என்பவரின் அலைபேசியில் தொடர்புகொண்ட அந்த மர்ம நபர், ஸ்ரீராமர், சீதை சிலைகளை செய்ய நேபாளத்தில் இருந்து புனிதமான சாலக்கிராம கற்கள் அயோத்திக்கு வந்து சேர்ந்த தினமான கடந்த வியாழக்கிழமை அன்று காலை 10 மணிக்கு தகர்க்கப்போவதாக கூறிவிட்டு இணைப்பை துண்டித்தார். உடனே இது குறித்து காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. ஸ்ரீராம ஜென்மபூமி வளாகம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகள் அனைத்திலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. மேலும், மாவட்டத்தின் முக்கிய பகுதிகளில் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டது. அதேசமயம், மிரட்டல் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு அந்த மர்ம நபரை கைது செய்யும் பணிகளும் முடுக்கி விடப்பட்டுள்ளது.