மிசோரமில் மிளிரும் பா.ஜ.க

மிசோரமின் மாரா தன்னாட்சி மாவட்ட கவுன்சில் தேர்தலில் பா.ஜ.க தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. மொத்தமுள்ள 25 இடங்களில் பா.ஜ.க 12 இடங்களையும், மாநிலத்தின் ஆளும் மிசோ தேசிய முன்னணி 9 இடங்களையும் கைப்பற்றியது. காங்கிரஸ் கட்சி 4 இடங்களை மட்டுமே பெற்றது. ஆளும் கட்சியும் பா.ஜ.கவும் ஏற்கனவே கூட்டணியில்தான் மிசோரமில் ஆட்சி செய்து வருகிறது என்பதும் அடுத்த மிசோரம் மாநில தேர்தல் 2023 நவம்பர் மாதங்களில் நடைபெற உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த வெற்றியை வரவேற்றுள்ள பா.ஜ.க அமைப்புப் பொதுச் செயலாளர் பி.எல்.சந்தோஷ், “மாரா தன்னாட்சி மாவட்ட கவுன்சிலில் தேர்தல் நடந்த 25 இடங்களில் 12 இடங்களில் வெற்றி பெற்றதன் மூலம், பா.ஜ.க வடகிழக்கில் தனது சிறகுகளை மேலும் விரித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் ‘சப்கா சாத் சப்கா விகாஸ்’ எனப்படும் ‘அனைவரையும் இணைத்துச் சென்று, அனைவருக்கும் முன்னேற்றத்தை வழங்குவது’ என்ற பார்வையை இது முன்னெடுத்துச் செல்கிறது” என்று தெரிவித்துள்ளார்.