கீழடியில் சூரியன் சந்திரனுடன் நாணயம்

சிவகங்கை மாவட்டத்தில் வைகை நதியோரம் கீழடியில் நடைபெற்று வரும் அகழாய்வின் ஒரு பகுதியாக, கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கிய ஏழாம் கட்ட அகழாய்வு, கீழடி, அகரம், கொந்தகை, மணலூர் ஆகிய இடங்களில் நடந்து வருகிறது. இந்த அகழாய்வில் ஏற்கனவே தங்கத்தால் ஆன பல்வேறு பொருள்கள் கிடைத்தன. தற்போது சூரியன், சந்திரன், விலங்குகளின் உருவங்கள் பொறிக்கப்பட்ட சதுர வடிவ வெள்ளி நாணயம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது முத்திரை நாணயமாக இருக்கலாம் என்று அகழாய்வாளர்கள் கருதுகின்றனர். இதன் பயன்பாடு, காலம் உள்ளிட்டவற்றை அறிய ஆய்வுக்காக அனுப்பப்பட உள்ளது.