ஆர்.எஸ்.எஸ் தொண்டர் மீது தாக்குதல்

கேரள முதல்வர் பினராயி விஜயனின் தொகுதி, சி.பி.எம் கோட்டை என கருதப்படும் கண்ணூர் பகுதியில், அம்பாடி என அழைக்கப்படும் யஷ்வந்த் என்ற ராஷ்டிரிய ஸ்வயம்சேவக சங்கத்தின் (ஆர்.எஸ்.எஸ்) தொண்டர் கொடூரமாக வெட்டப்பட்டார். அவரது உடல்நிலை தற்போது கவலைக்கிடமாக உள்ளது. தலச்சேரியில் உள்ள இந்திரா காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், பலத்த காயம் காரணமாக கண்ணூர் எம்.ஐ.எம்.எஸ் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவு வென்டிலேட்டருக்கு மாற்றப்பட்டார். தலச்சேரி, நியூ மாஹே அருகே உள்ள வடக்குநாடு பகுதியைச் சேர்ந்தவர் யஷ்வந்த். பேருந்து ஓட்டுநராக பணியாற்றிம் இவர் பாரதிய மஸ்தூர் சங்க (பி.எம்.எஸ்) உறுப்பினர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை 5:30 மணியளவில் இந்த தாக்குதல் நடந்துள்ளது. அவரை தாக்கியவர்கள் முன்னதாக அவரை அலைபேசியில் அழைத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. யஷ்வந்த் தனது பேருந்தை ஓட்டிக்கொண்டு எடையில்பீடிகாவிற்கு சென்றபோது அங்கு அவர் வெட்டப்பட்டுள்ளார். அவரது உடலின் பின்புறம், கால்கள் மற்றும் கைகளில் பலத்த காயங்கள் உள்ளன. நியூ மாஹே பகுதி காவல்துறையினர் அந்த வீதிகளில் ரோந்து சென்றாலும் தாக்குதல் நடத்தியவர்களை அடையாளம் காண முடியவில்லை என தெரிவிக்கின்றனர். தலச்சேரி உதவி ஆணையர் நிதின் ராஜ் தலைமையில், காவல்துறையினர் இதுகுறுத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இடதுசாரி சி.பி.எம் குண்டர்களும் சமீபத்தில் தடை செய்யப்பட்ட பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா (பி.எப்.ஐ) பயங்கரவாதிகளும் தங்கள் எதிரிகளை அழிக்க இதுபோன்ற பல செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர் என்பதற்கு பல்வேறு உதாரணங்கள் உள்ளன. மேலும், சந்தேகத்திற்கிடமான வகையில் இடதுசாரி சார்பு ஊடகங்கள், இந்த கொடூர தாக்குதலை ‘தனிப்பட்ட போட்டியாக’ சித்தரித்து வருகின்றன என்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகிறது.

தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) அதிகாரிகள், கடந்த செப்டம்பர் மாத இறுதியில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா உயர்மட்ட தலைவர்களை கைது செய்தது முதல் கண்ணூரில் உள்ள ஹிந்துகளுக்கும் ஹிந்து அமைப்பினருக்கும் சிக்கல் உருவாகியுள்ளது. கேரளாவின் பல இடங்களில் வன்முறைகளை அரங்கேற்றிய அவர்கள், ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்க அலுவலகத்தின் மீதும் பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தினர். மற்றொரு சம்பவத்தில், கடந்த வாரம், கண்ணூர் மாவட்டம் சோக்லி காவல் நிலையம் அருகே உள்ள ஆர்.எஸ்.எஸ் சேவா கேந்திரா சாரதி கிளப் கட்டிடத்தின் மீது சி.பி.எம் குண்டர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதனால், அலுவலகத்தின் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்தனர். இந்த தாக்குதலின் பின்னணியில் சி.பி.எம் கட்சியினர் இருக்கின்றனர். இதுகுறித்து ஐந்து சி.பி.எம் உறுப்பினர்கள் மீது கேரள காவல்துறை வழக்குப் பதிவு செய்த போதிலும் யாரையும் இதுவரை கைது செய்யவில்லை என பா.ஜ.க கதிரூர் மண்டல செயலாளர் பிஜு குற்றம் சாட்டினார்.