தி.மு.கவின் மற்றொரு நாடகம்

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு தி.மு.க. ஆரம்பம் முதலே எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையிலும், ஆட்சி அமைந்ததும் மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதற்கேற்ப, தமிழக முதல்வர் ஸ்டாலின், வேளாண் சட்டங்களுக்கு எதிரான தீர்மானத்தை நிறைவேற்றினார். இதற்கு பா.ம.க., காங்கிரஸ், ம.தி.மு.க., வி.சி.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்தியக் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. பா.ஜ.க.,வும் அ.தி.மு.க.,வும் வெளிநடப்பு செய்தன. இதுகுறித்து பா.ஜ.க தமிழக மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது டுவிட்டர் பக்கத்தில், ‛மத்திய அரசின் மூன்று விவசாய சட்டங்களுக்கு எதிராகத் தி.மு.க தலைமையிலான அரசு சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வந்துள்ளது. இந்தத் தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்துள்ளனர். தமிழக விவசாயிகள் எவரும் இந்தச் சட்டங்களை எதிர்க்காது, மகிழ்ச்சியுடன் வரவேற்கும்போது, ​​தமிழக மக்களுக்கு இது அறிவாலயத்தின் கண்துடைப்பு நாடகம் என்று நன்றாகத் தெரியும்’ என்று கூறியுள்ளார்.