தவறான சிகிச்சை குற்றச்சாட்டு குறித்த விசாரணை

சென்னை காவல் துறை தலைமைக் காவலர் ஒருவர், தனது மகளுக்கு எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் அளிக்கப்பட்ட தவறான சிகிச்சையால் அந்தக் குழந்தையின் கால் பாதிக்கப்பட்டதாகவும், இதற்கு காரணமான மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பலமுறை மனு அளித்தும் அந்த புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் குற்றம்சாட்டியிருந்தார். இதனால் வேறுவழியின்றி, ஏப்ரல் 13ம் தேதி தலைமைச் செயலக வாசலில் தனது மகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டார். இந்த சூழலில், இது தொடர்பாக தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணைய உறுப்பினர்கள், சென்னை எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் நேற்று ஆய்வு மேற்கொண்டு மருத்துவர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணைக்கு பிறகு, தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் ஆர்.ஜி. ஆனந்த் செய்தியாளர்களிடம் பேசுகையில், “ஆணையம் தாமாக முன்வந்து இந்த விவகாரத்தை விசாரணை செய்தது. மருத்துவர்களிடம் இது சம்பந்தமாக விசாரணை நடத்தப்பட்டது. நெப்ராடிக்ஸ் சின்டம் என்ற நோய் சிறுமியை பாதித்துள்ளது. மற்றபடி, சிறுமிக்கு தவறான சிகிச்சை கொடுக்கப்படவில்லை. சிறுமியின் கால் வீங்கியதால் தான் அவரால் சரியாக நடக்க முடியவில்லை. பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோரிடம் இதுகுறித்து தெளிவுபடுத்தினோம். ஒரு மருத்துவக்குழு அமைத்து இது சம்பந்தமாக விரிவான ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு அதன்படி, சிறுமிக்கு மேல் சிகிச்சை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும். அவருக்காக மாற்றுப்பாதம் பொருத்தவும் ஏற்பாடு செய்யப்படும்.” என கூறினார்.