கொங்கு மக்களை கேவலப்படுத்திய ஆ.ராஜா

‘கடும் உழைப்புக்கு பெயர் பெற்ற கொங்கு மக்களை அசிங்கப்படுத்துவதை, தி.மு.க., – எம்.பி., ஆ.ராஜா நிறுத்தி கொள்ள வேண்டும்’ என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

தி.மு.க., துணை பொது செயலரும், எம்.பி.,யுமான ராஜா, பொதுக்கூட்டத்தில் பேசும்போது, ‘கொங்கு வேளாளர், கவுண்டர் சமூகத்தை பிற்படுத்தப்டோர் பட்டியலில் சேர்க்க கையெழுத்து போட்டது கருணாநிதியின் பேனா. அந்த பேனா இல்லை என்றால் அண்ணாமலை ஆடு மேய்த்திருக்க வேண்டும். ‘பழனிசாமி வெல்லமண்டி வைத்திருப்பார். வானதி சீனிவாசன் எங்கேயாவது கூடை பின்னிக் கொண்டிருப்பார்’ என, பேசியுள்ளார்.

இதற்கு கண்டனம் தெரிவித்து, அண்ணாமலை விடுத்த அறிக்கை: ஊழல் செய்து மக்கள் பணத்தை திருடியவர்கள் ஜம்பமாக வலம் வரும் போது, ஆடு மேய்ப்பது, வெல்லமண்டி வைத்திருப்பது, கூடை பின்னுவது போன்ற விவசாயம் சார்ந்த தொழில்கள், ராஜாவுக்கு கேவலமான தொழில்களாக தெரியும்.

‘கொங்கு செழித்தால், எங்கும் செழிக்கும்’ என்ற சொல்லாடல் கருணாநிதி பிறக்கும் முன்பே வழக்கத்தில் உள்ளது. இதை, ‘2ஜி’ ராஜாவுக்கு நினைவூட்ட விரும்புகிறேன். கொங்கு பகுதிக்கு, தி.மு.க., செய்தது என்னவென்றால், 1970ல் கொங்கு பகுதியில் மின் கட்டணத்தை குறைக்க கோரி போராடிய மூன்று விவசாயிகளை சுட்டுக் கொன்றது தான்.

கடும் உழைப்புக்கு பெயர் பெற்ற கொங்கு மக்களை அசிங்கப்படுத்துவதை ராஜா நிறுத்தி கொள்ள வேண்டும். யார் முன்னேற்றத்திற்காவது தன் கட்சி தலைவர் பெயரில், ‘ஸ்டிக்கர்’ ஒட்ட வேண்டும் என, ராஜா விரும்பினால், சைக்கிளில் நீதிமன்றம் சென்ற அவர் உள்ளிட்ட, தி.மு.க.,வினர், இன்று, பல ஆயிரம் கோடி ரூபாய் சொத்துக்கு அதிபதியாக இருப்பதற்கு வேண்டுமானால், கருணாநிதி ஸ்டிக்கர் ஒட்டிக் கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.