தி.மு.கவினரின் திட்டமிட்ட தாக்குதல்

சென்னை, கோவை, கரூர் உள்ளிட்ட் இடங்களில் தி.மு.க அமைச்சர் செந்தில்பாலாஜியின் சகோதரர் அசோக், அரசு ஒப்பந்ததாரர்கள் ஆகியோருக்கு சொந்தமான 40க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் கடந்த மூன்று தினங்களாக சோதனை நடத்தினர். குறிப்பாக, டாஸ்மாக்கில் நடைபெறும் முறைகேடு தொடர்பாக தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, அறப்போர் இயக்கம் உள்ளிட்ட பலர் தொடர்ச்சியாக அதன் அமைச்சர் செந்தில்பாலாஜி மீது ஊழல் குற்றச்சாட்டை முன்வைத்தனர். அதனடிப்படையிலேயே இந்த சோதனை நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.இந்த சோதனைக்கு வந்திருந்த அதிகாரிகளையும் அவர்களது வாகனங்களையும் தி.மு.க குண்டர்கள் தாக்கினர்.இதற்கு தமிழகமெங்கும் கடும் கண்டனம் எழுந்தது.இந்த சூழலில், இதில் சம்பந்தப்பட்ட 50க்கும் மேற்பட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றாலும் 8 பேர் மட்டுமே இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.இதனிடையே, வருமான வரித்துறை அதிகாரிகளை தி.மு.க குண்டர்கள் தாக்கியது திட்டமிட்டு நடத்தப்பட்டதாக வருமான வரித்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதல் திட்டமிட்டு நடத்தப்பட்டதற்கான ஆதாரம் தங்களுக்கு கிடைத்திருப்பதாகவும், குறிப்பாக, செந்தில்பாலாஜியின் ஆதரவாளர் கொங்குமெஸ் சுப்பிரமணி, செல்வராஜ் என்பவருடன் பேசிய ஆடியோ பதிவு கிடைத்திருப்பதாகவும் வருமான வரித்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த ஆடியோ ஆதாரத்தை காவல்துறை அதிகாரிகளிடம் சமர்பிக்க இருப்பதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.