அம்பேத்கரை அவமதிக்கும் இடதுசாரி அமைச்சர்

கேரள மாநிலம், பத்தனம்திட்டா மாவட்டம் மல்லப்பள்ளியில் நடந்த ஒரு அரசியல் நிகழ்ச்சியில் பேசிய கேரள கேரள மீன்வளம் மற்றும் கலாச்சாரத்துறை அமைச்சரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவருமான சஜி செரியன், “நம்மிடம் அழகாக எழுதப்பட்ட அரசியலமைப்பு உள்ளது என்று நாம் அனைவரும் கூறுகிறோம். ஆனால், அரசியலமைப்புச் சட்டம் நாட்டு மக்களைக் கொள்ளையடிக்கப் பயன்படும் வகையில் எழுதப்பட்டுள்ளது என்று நான் கூறுவேன். எங்கு வேண்டுமானாலும் இதை சொல்வேன். இந்திய அரசியலமைப்பு உழைக்கும் வர்க்கத்திற்கு எந்தப் பாதுகாப்பும் இல்லை, அதற்குப் பதிலாக முட்டாள்தனமான மதச்சார்பின்மை மற்றும் ஜனநாயகம் போன்றவை அதில் எழுதப்பட்டுள்ளது. அரசியலமைப்புச் சட்டம் ஆங்கிலேயர்களின் விருப்பப்படி ஒரு இந்தியரால் எழுதப்பட்டது. இது கொள்ளையடிக்க அனுமதிக்கும் ஒன்று, உழைப்பாளிகளுக்கு இதில் எதுவும் இல்லை, ”என்று கூறினார். பாபாசாகேப் அம்பேத்கரையும் அவரது நாட்டுப்பற்றையும் அவர் எழுதிய அரசியல் சாசனத்தையும் ஒருனே அவமதித்துள்ள சஜி செரியனின் பேச்சுக்கு கேரளவில் பலத்த கண்டனம் எழுந்துள்ளது. முதல்வர் பினராயி விஜயன் உடனடியாக சஜியை மாநில அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும் அல்லது அவரது அமைச்சரை பதவி நீக்கம் செய்ய கவர்னர் பரிந்துரை செய்ய வேண்டும் என்று பா.ஜ.க மாநிலத் தலைமை கோரிக்கை விடுத்துள்ளது.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை ஏன் கம்யூனிஸ்டுகள் எதிர்க்கின்றனர்

“அரசியலமைப்புச் சட்டத்தின் மீதான கண்டனம் பெரும்பாலும் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் சோசலிஸ்ட் கட்சி ஆகிய இருவரிடம் இருந்து வருகிறது. அவர்கள் ஏன் அரசியலமைப்பை கண்டிக்கிறார்கள்? அது உண்மையில் மோசமான அரசியலமைப்பு என்பதனாலா? இல்லை என்று நான் சொல்வேன். கம்யூனிஸ்ட் கட்சி, பாட்டாளி வர்க்க சர்வாதிகாரக் கொள்கையின் அடிப்படையில் ஒரு அரசியலமைப்பை விரும்புகிறது. அவர்கள் அரசியலமைப்பை கண்டிக்கிறார்கள், ஏனெனில் அது நாடாளுமன்ற ஜனநாயகத்தை அடிப்படையாகக் கொண்டது. சோசலிஸ்டுகள் இரண்டு விஷயங்களை விரும்புகிறார்கள். அவர்கள் முதலில் விரும்புவது, தாங்கள் ஆட்சிக்கு வந்தால், இழப்பீடு வழங்காமல் அனைத்து தனியார் சொத்துக்களையும் தேசியமயமாக்கவோ அல்லது சமூகமயமாக்கவோ அரசியலமைப்புச் சட்டம் அவர்களுக்கு சுதந்திரம் அளிக்க வேண்டும். இரண்டாவது, அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அடிப்படை உரிமைகள் முழுமையானதாகவும் வரம்புகள் அற்றதாகவும் இருக்க வேண்டும், அதனால் தங்கள் கட்சி ஆட்சிக்கு வரத் தவறினால், விமர்சிக்க மட்டுமல்ல, அதைக் கவிழ்க்கவும் தடையற்ற சுதந்திரம் அவர்களுக்கு இருக்கும்” என்பதால்தான்” என்கிறார் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர்.