சர்ச்சை நடிகர் சித்தார்த்

தி.மு.க அனுதாபியான நடிகர் சித்தார்த் அடிக்கடி சர்ச்சைக்குரிய விஷயங்களை பேசி வருபவர். அவர் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரிஸ் பதிவில் சமீபத்தில் சி.ஆர்.பி.எப் வீரர்களை அவமானப்படுத்தும் விதமாக வெளியிட்ட ஒரு பதிவால் மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார். அவரது பதிவில், “மதுரை விமான நிலையத்தில் சி.ஆர்.பி.எப் அதிகாரிகளால் 20 நிமிடங்களாக துன்புறுத்தலுக்கு உள்ளானோம். பைகளில் இருந்த காயின்களை எடுக்குமாறு எனது வயதான பெற்றோர்களிடம் கூறினர். தொடர்ந்து எங்களிடம் இந்தியில் பேசிக்கொண்டு இருந்தனர். ஆங்கிலத்தில் பேசுமாறு நான் வலியுறுத்தியும் அதை கேட்காமல் தொடர்ந்து ஹிந்தியில் பேசினர். இதற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவித்த போது கடுமையாக நடந்து கொண்ட அதிகாரிகள், இந்தியாவில் இப்படித்தான் இருக்கும் என்றும் கூறினர். வேலையில்லாதவர்கள் அதிகாரத்தை காட்டுகின்றனர்” என்று பதிவிட்டு இருந்தார். இன்ஸ்டாகிராமில் ஸ்டோரிஸ் 24 மணி நேரம் மட்டுமே காட்டும் என்பதால் தற்போது அவரது பதிவு இல்லை. இருந்தாலும் இது தொடர்பான ஸ்க்ரீன்ஷாட்கள் இணையத்தில் பரவி வருகிறது. பல ஆங்கில ஊடகங்களிலும் இந்த செய்தி வெளியாகியுள்ளது. சித்தார்த்தின் இந்த பதிவுக்கு கண்டனங்கள் குவிந்து வருகின்றன. முன்னதாக, பஞ்சாபில் பிரதமர் நரேந்திர மோடியின் பாதுகாப்பு விதிமீறல் குறித்து இந்திய வீராங்கனைசாய்னா நேவாலின் டுவீட்டுக்கு பதில் அளித்த சித்தார்த் சாய்னா நேவாலுக்கு எதிராக பாலியல் ரீதியில் மிகவும் கீழ்தரமாக டுவீட் செய்தார். இதனையடுத்து தேசிய மகளிர் ஆணையம் டுவிட்டர் இந்தியாவை உடனடியாக சித்தார்த்தின் கணக்கை முடக்குமாறு கேட்டுக் கொண்டது. ஜனவரி மாதம், ஹைதராபாத் காவல்துறையின் சைபர் கிரைம் பிரிவால் சித்தார்த் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அப்போது அவர் சர்ச்சையில் சிக்கினார். பின்னர் அவசர அவசரமாக பகிரங்க மன்னிப்பு கேட்டார் சித்தார்த். அவர் தனது கேவலமான கருத்தை “முரட்டுத்தனமான நகைச்சுவை” என்று சிறிதும் வெட்கமின்றி கூறினார். எனது தொனியையும் வார்த்தைகளையும் நியாயப்படுத்த முடியாது என்று ஒப்புக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.