பாரதத்திற்கான சரியான நேரம் இது

மும்பையில் நடைபெற்ற 21வது உலக கணக்காளர் மாநாட்டில் பேசிய ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரரான கௌதம் அதானி, “பாரதத்தின் அதிகரித்து வரும் பொருளாதாரத்தின் அடித்தளங்கள் பொருத்தமானதாக மாறியிருக்கிறது. அரசியல் மற்றும் நிர்வாக அமைப்பில் பல கட்டமைப்பு சீர்திருத்தங்களைத் தொடங்குவதற்கான திறனை அரசு, தேசத்திற்கு வழங்கியுள்ளது. பாரதத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் முதல் டிரில்லியன் டாலர்களை அடைய நமக்கு 58 ஆண்டுகள் ஆனது, அடுத்த டிரில்லியனைப் பெற 12 ஆண்டுகளும் மூன்றாவது டிரில்லியனுக்கு ஐந்து ஆண்டுகளும் ஆனது. மத்திய அரசு ஒரே நேரத்தில் சமூக மற்றும் பொருளாதார சீர்திருத்தங்களை செயல்படுத்தி வரும் வேகத்தில், அடுத்த தசாப்தத்தில், பாரதம் தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஒவ்வொரு 12 முதல் 18 மாதங்களுக்கும் ஒரு டிரில்லியன் டாலர்களை சேர்க்கத் தொடங்கும் என்று நான் எதிர்பார்க்கிறேன்.

2050ம் ஆண்டுக்குள் 30 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக பாரதம் இருக்கும். மேலும் பங்குச் சந்தை மூலதனம் 45 டிரில்லியன் டாலர்களைத் தாண்டும். பாரதம் தற்போது 3.5 டிரில்லியன் அமெரிக்க டாலர் மொத்த உள்நாட்டு உற்பத்தியுடன் (ஜி.டி.பி) உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக உள்ளது. ஒரு நாடு, அதன் காலனித்துவ ஆட்சியாளர்களால் நசுக்கப்பட்டு, சக்கையாக வடிகட்டப்பட்டும் இன்று ஒரு அசாதாரண வளர்ச்சியின் உச்சத்தில் நிற்கிறது. ஜனநாயகம் மற்றும் பன்முகத்தன்மையை சமரசம் செய்யாமல் அதிக வருமானம் கொண்ட தேசமாக வெளிப்படும் பாதையில் பயணிக்கும் ஒரே பெரிய நாடு பாரதம் தான்.

2030க்கு முன்பே, நாம் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக இருப்போம். அதன்பிறகு, 2050ல் உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரமாக இருப்போம். வாங்கும் சக்தி சமநிலையில் (பி.பி.பி), 2050ம் ஆண்டளவில் உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பாரதத்தின் பங்கு 20 சதவீதத்திற்கு அதிகமாக இருக்கும். பொருளாதார வளர்ச்சியையும் ஜனநாயகத்தையும் இணைத்த பாரதத்தின் வெற்றிக் கதைக்கு வேறு இணையில்லை. பாரத நாட்டினராக இருக்க, பாரதத்தில் இருக்க, பாரதத்துடன் இணைந்திருக்க வேண்டிய காலம் எப்போது என்றால் அது இப்போதுதான். புதிய நெகிழ்ச்சியான பாரதத்தை உருவாக்குவதற்கான அடித்தளம் ஏற்கனவே போடப்பட்டுள்ளது.

பாரதத்தின் மீதான உலகளாவிய நம்பிக்கையை அதிகரிப்பதன் அடையாளமாக, அந்நிய நேரடி முதலீடு ஒரு டிரில்லியன் டாலரைத் தொடும். கடந்த 2021ம் ஆண்டில், பாரதம் ஒவ்வொரு 9 நாட்களுக்கும் ஒரு யூனிகார்னைச் சேர்த்தது. உலகளவில் அதிக எண்ணிக்கையிலான நிகழ்நேர நிதி பரிவர்த்தனைகளை மேற்கொண்டது. இது 48 பில்லியன் என்ற அளவில் நம்மை பிரமிக்க வைக்கிறது. இது அமெரிக்கா, கனடா, பிரான்ஸ் மற்றும் ஜெர்மனியை விட 6 மடங்கு அதிகம். உள்நாட்டு நிறுவனங்களும் பன்னாட்டு நிறுவனங்களும் பாரதத்தின் சந்தை அளவைப் பயன்படுத்திக் கொள்வதால், நமது கலாச்சாரத்தின் மையத்தை அங்கீகரிக்கும் மற்றும் நமது தேசியத் தேவைகளுடன் இணைந்த ஒரு சமூகக் கட்டமைப்பை செயல்படுத்துவதற்கான சவாலை எதிர்கொள்ள கார்ப்பரேட்டுகள் நிர்பந்திக்கப்படும் வலுவான சட்டங்கள் நமக்குத் தேவைப்படும்.

சீனா மேற்கத்திய ஜனநாயகக் கொள்கைகளை ஏற்க வேண்டும், மதச்சார்பற்ற கொள்கைகள் உலகளாவியவை, ஐரோப்பிய ஒன்றியம் ஒன்றாக இருக்கும், ரஷ்யா கட்டாயப்படுத்தப்படும் என்பது உள்ளிட்ட பல அனுமானங்களுக்கு உலக நெருக்கடிகள் சவால் விடுத்துள்ளன. இந்தப் பல நிலை நெருக்கடியானது, உலகச் சூழல்களில் காலடி எடுத்து வைக்கக்கூடிய மற்றும் நிலைப்படுத்தக்கூடிய வல்லரசுகளின் ஒருமுனை அல்லது இருமுனை என்ற உலகத்தின் கட்டுக்கதையை உடைத்துவிட்டது. எனது பார்வையில் இந்த வளர்ந்து வரும் பல்முனை உலகில், வல்லரசுகள் நெருக்கடி காலங்களில் மற்றவர்களுக்கு உதவுவதற்கு பொறுப்பேற்க வேண்டும். மற்ற நாடுகளை அடிபணியச் செய்யாமல், மனிதநேயத்தை தங்கள் முதன்மை இயக்கக் கொள்கையாக வைத்திருக்க வேண்டும். ஒரு வல்லரசு, ஒரு செழிப்பான ஜனநாயகமாகவும் இருக்க வேண்டும். ஒரு சமூகத்தின் சமூகக் கட்டமைப்பைப் புறக்கணிக்கும் முதலாளித்துவத்தின் பாணி, அதன் மிகப் பெரிய பின்னடைவை எதிர்கொள்கிறது” என்று கூறினார்.