முழுமையான நம்பிக்கை

36,000 அடி உயரத்தில் அட்லாண்டிக் பெருங்கடல் மேலே விமானம் பறந்து கொண்டிருக்கிறது. நடுவானில் “இயந்திரக் கோளாறு” என்று அறிவிக்கிறார் அதன் விமானி.  எல்லோரையும் தற்காப்பு பெல்ட் அணிய சொல்கிறார். பயணிகள் மத்தியில் கலக்கம் பீதி. விமானம் குலுங்குகிறது. இறங்குகிறது மீண்டும் மேலே எழுகிறது. அப்பொழுது பைலட்டிடம் இருந்து “ஒரு இயந்திரம் செயலிழந்து விட்டது பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்” என்று மற்றொரு அறிவிப்பு வருகிறது. பயணிகளின் கூக்குரல் விமானத்தை நிலைகுலையச் செய்கிறது.

பிரார்த்தனை செய்து கொண்டும், தியானம் செய்து கொண்டும், அவரவர் இஷ்ட தெய்வங்களை வணங்கி கொண்டும், பயணிகள் உயிரை கையில் பிடித்துக்கொண்டு கதறுகிறார்கள்.  விமானம் சற்று தாழ்வாக பறக்கிறது மீண்டும் மேலெழுகிறது. சிறிது நேரத்தில் அமைதி. பைலட்டிமிருந்து அடுத்த அறிவிப்பு வருகிறது. “நாம் பத்திரமாக இருக்கிறோம். இயந்திரம் மீண்டும் இயங்கச் செய்கிறது. நாம் ஆபத்திலிருந்து தப்பி விட்டோம்” என்கிறார். பயணிகள் முகத்தில் அப்போதுதான் புன்னகை வருகிறது. அருகில் உள்ள விமான நிலையத்தில் தரை இறக்குகிறார் விமானி.

அதில் பயணம் செய்த ஒரு விஞ்ஞானி, வித்தியாசமான ஒரு காட்சியை மட்டும் கண்டுகொண்டே வருகிறார். தன்னருகே அமர்ந்துள்ள ஒரு குழந்தை, இந்த களேபரங்களைப்பற்றி சிறிதும் கண்டுகொள்ளாமல் தனக்கு முன் உள்ள தொடுதிரையில் சந்தோஷமாக வீடியோ கேம்ஸ் விளையாடிக் கொண்டே வருகிறது. அதனிடம் இந்த அறிவிப்புகள், பயணிகளின் கூக்குரல்கள், பிரார்த்தனைகள் குறித்த எந்த சலனமோ, பயமோ எதுவும் இல்லை. தரை இறங்கிய உடன் அந்த விஞ்ஞானி, அந்த குழந்தையை பார்த்து கேட்கிறார் “இவ்வளவு அமர்க்களம் நடந்தது உனக்கு தெரியுமா உனக்கு ஏன் ஒரு துளி கூட பயம் வரவில்லை?” எனக் கேட்கிறார்.

அதற்கு அந்த சிறுமி சொன்ன பதில் அவரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. “இந்த விமானத்தை இயக்கும் விமானி என்னுடைய தந்தை. என் தந்தை என்னை பத்திரமாக வீட்டிற்கு அழைத்துச் செல்வார் என்ற நம்பிக்கை முழுவதுமாக எனக்கு உள்ளது. பின்னர் நான் ஏன் பயப்பட வேண்டும்? என்ற சிறுமியின் பதிலால் திக்குமுக்காடிப் போனார் அந்த விஞ்ஞானி.

அந்த  குழந்தை தன் தந்தை மீது வைத்த முழு நம்பிக்கையை நாம் நம் இறைவனிடம் வைத்தால் பயம் என்ற ஒன்று வருமோ நமக்கு!?