சிவசேனா வழக்கில் புதிய திருப்பம்

மஹாராஷ்டிராவில், சிவசேனா கட்சியில் மூத்த தலைவர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் அதிருப்தியாளர்கள் தனிக்குழுவாக பிரிந்தது; பா.ஜ.கவுடன் கூட்டணி அரசு அமைத்துள்ளனர். முதல்வராக ஷிண்டே பதவியேற்றார். இந்நிலையில் எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்வது உட்பட, இரு தரப்பும் உச்சநீதிமன்றத்தில் ஐந்து வழக்குகள் தாக்கல் செய்துள்ளன. இந்த வழக்குகள், தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தன. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட அமர்வு கூறியுள்ளதாவது; இங்கு வைக்கப்பட்டு உள்ள வாதங்களை பார்க்கும்போது, அணி மாறுவது, இணைப்பது, தகுதி நீக்கம் செய்வது என, அரசியல் சாசனம் தொடர்பான பல கேள்விகள் எழுப்ப்ப்பட்டுள்ளன.

அதனால், இந்த வழக்குகளை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றலாமா என்ற கேள்வி எழுகிறது. அதனால், எந்தெந்த பிரச்சனைகள் குறித்து விசாரிக்கப்பட வேண்டும் என்பதை இரு தரப்பும், வரும் 27ம் தேதிக்குள் அறிக்கையாக தாக்கல் செய்யவும். அதன் மீது, ஆக, 1ம் தேதி விசாரணை நடத்தப்படும் என்று அறிவித்தது.