காங்கிரசுக்கு பெவிக்விக்

இரட்டை மலை சீனிவாசன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, “தி.மு.கவில் ஏக்நாத் ஷிண்டே உருவாக்குவோம் என கூறவில்லை. அது எங்களது வேலை கிடையாது. ஏக்நாத் ஷிண்டே உருவாவார் என்று கூறினோம். மஹாராஷ்டிராவில் நடந்ததுக்கும் எங்களுக்கும் சம்பந்தம் கிடையாது. எங்கெல்லாம் குடும்ப கட்சி இருக்கிறதோ அங்கெல்லாம் ஏக்நாத் ஷிண்டே உருவாவார் என்பது அர்த்தம். மக்களை ஆதரவை, அன்பை, வாக்கை பெற்று ஆட்சிக்கு வருவது தான் பா.ஜ.கவின் நோக்கம். எந்த தனிப்பட்ட மனிதரையும் முன்னிருத்து வளரும் கட்சி பா.ஜ.க அல்ல. தொண்டர்களுக்கான கட்சி இது. இங்கு புதியவர்கள் வந்து கொண்டிருப்பார்கள். அவர்களுக்கு வாய்ப்புகள் கிடைக்கும். ஐ.சி.யு’வில் கட்சியை வைத்துள்ள கே.எஸ். அழகிரி அரசியல் பேசுவதை நிறுத்த வேண்டும். ஐ.சி.யுவில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு ஆக்சிஜனாக தி.மு.க உள்ளது. அதனை நிறுத்திவிட்டால், ஒன்றில் கூட டெபாசிட் கூட கிடைக்காது. ஓட்டு இயந்திரத்தில் அவர்களின் சின்னத்தை அச்சிடுவது கூட வீணாகிவிடும். அழகிரி அரசியல் பேசுவதை நிறுத்திவிட்டு சிதறி கிடக்கும் கட்சியை ஒட்ட வைக்கலாம். அதற்கான, பெவிக் குயிக்கை செலவை பா.ஜ.க ஏற்றுக் கொள்ளும். பா.ஜ.கவுக்கு 2024ல் 25 எம்.பி.,க்கள் கிடைக்கும். அது உறுதி. அதனை அழகிரி பார்ப்பார். அன்று காங்கிரஸ் கட்சிக்கு முடிவுரை எழுதப்படும். ஒரு கட்சி என்ன அவமானபடுத்தினாலும், கழுத்தை பிடித்து வெளியே தள்ளினாலும் கூட கூட்டணியில் இருப்போம் என காங்கிரஸ் நினைக்கிறது” என கூறினார்.