அறநிலையத்துறை கையகப்படுத்தலாம்

சென்னை சின்ன நீலாங்கரையில் உள்ள சக்தி முத்தம்மன் கோயிலுக்குச் சொந்தமான 2.03 ஏக்கர் நிலம், ஹிந்து சமய அறநிலையத் துறையின் அனுமதியின்றி 1963ல் மீன்வளத் துறைக்கு மாற்றபட்டது. அதில் ஒரு பகுதியில் ஐஸ் உற்பத்தி நிலையம் மற்றும் மீன்களை பாதுகாப்பதற்கான கட்டடம் ஆகியவை கட்டப்பட்டன. அதேபோல, சேலம் கோட்டை மாரியம்மன் கோயிலுக்குச் சொந்தமான 1.15 ஏக்கர் நிலம் கடந்த 2018ல் அறநிலையத் துறை அனுமதி இல்லாமல் போக்குவரத்து துறைக்கு மாற்றப்பட்டு, வட்டார போக்குவரத்து அலுவலகம் அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டன. தமிழக அரசின் இந்த உத்தரவுகளை எதிர்த்து கோயில் நிர்வாகங்களின் சார்பிலும், ஆர்வலர்கள் குகன், ஸ்ரீதர், ராதாகிருஷ்ணன் ஆகியோர் சார்பிலும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி ஆர்.மகாதேவன், அறநிலையத் துறை கோயில்களின் நிலங்களை கோயில் அல்லாத பிற பயன்பாடுகளுக்கு மாற்றக் கூடாது என கூறி தீர்ப்பளித்தார். இதனை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதிகள் அமர்வு, நீதிபதி ஆர்.மகாதேவன் அளித்த உத்தரவு செல்லும் என்று கூறி உத்தரவிட்டதுடன், சம்பந்தப்பட்ட கோயில்களின் நிலங்களை ஹிந்து அறநிலையத்துறை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வரலாம் என்றும் தெரிவித்துள்ளது.