ஊழல் பெருச்சாளிகளின் கூடாரம்

மத்திய பா.ஜ.க அரசின்  8 ஆண்டுகள் சாதனை விளக்க பொதுக்கூட்டம் திருநெல்வேலியில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய பா.ஜ.க மாநில தலைவர் கே. அண்ணாமலை, கொடியவர்களின் கூடாரமாகவும் மக்களிடம் இருந்து கொள்ளையடிப்பவர்களாகவும், ஊழலை வைத்து சம்பாதிக்கும் அரசியல்வாதியாகவும் தி.மு.க மாறியுள்ளது. மத்தியில், பாரதப் பிரதமர் மோடி தலைமையிலான 8 ஆண்டுகால ஆட்சியில்  மத்திய அமைச்சர்கள் ஒருவர் மீது கூட ஊழல் புகார் கூற முடியவில்லை. ஆனால் தமிழகத்தில் ஒரே ஆண்டில் தி.மு.க ஊழல் பெருச்சாளிகளின் கூடாரமாக மாறி உள்ளது. இதுதான் இவர்களின் சாதனை. தி.மு.க கண்ணுக்குத் தெரியாத விஷயத்திலும் ஊழல் செய்வார்கள். தமிழகத்தில் ஓராண்டு உருப்படியாக ஆட்சி நடத்தத் தெரியாதவருக்கு பாரதத்தின் துணை பிரதமராக வருவதற்கு ஆசை. ஒரு விஷயத்தை உருப்படியாக செய்ய முடியாத தி.மு.க, பா.ஜ.க அரசுடன் போட்டியிடுவது எலிக்கும் யானைக்குமான போட்டியை போன்றது. அண்ணாமலை, பெரிய பொறுக்கி என தி.மு.க அமைச்சர் தா.மோ அன்பரசன் கூறியுள்ளார். அமைச்சர் கூறிய வார்த்தையை ஏற்றுக்கொள்கிறேன். நான் ஒரு பொறுக்கி தான், ஆனால் எப்படிப்பட்ட பொறுக்கி என்றால், திமுகவின் ஊழல்களை பொறுக்கி, வன்முறையை பொறுக்கி, திமுகவின் அராஜகத்தை பொறுக்கி எடுத்துவந்து மக்கள் மன்றத்தில் கொடுக்கும் பொறுக்கி. அதற்காக எனக்கு பொறுக்கி என்ற பட்டத்தை நீங்கள் கொடுத்தீர்கள் என்றால் கம்பீரமாக ஏற்றுக் கொள்வேன்’ என கூறினார்.