மன்னிப்பு கோரிய சித்தார்த்

பஞ்சாபில் பிரதமர் மோடி சென்றபோது திட்டமிட்டு நடத்தப்பட்ட பாதுகாப்பு குளறுபடிகளை கண்டித்து பாரதத்தின் பாட்மின்டன் வீராங்கனை செய்னா நேவால் டுவிட்டரில் பதிவிட்டிருந்தார். இதற்கு நடிகர் சித்தார்த் மிகக் கீழ்த்தரமாக பெண்களை அவமதிக்கும் வகையில் செய்னாவை விமர்சித்து தனது தகுதியை வெளிச்சம்போட்டுக் காண்பித்தார். இதற்கு தேசமெங்கும் கடும் கண்டனம் எழுந்தது. சித்தார்த் மீது வழக்கு பதிவு செய்ய, தேசிய மகளிர் ஆணையம் காவல்துறைக்கு பரிந்துரை செய்தது. இதனால் பயந்துபோன சித்தார்த், செய்னாவிடம் மன்னிப்பு கோரியுள்ளார். உங்கள் பதவிற்கு நான் அளித்த மூர்க்கத்தனமான நகைச்சுவைக்காக உங்களிடம் மன்னிப்பு கேட்க விரும்புகிறேன். உங்கள் பதிவை படிக்கும் போது எனக்கு ஏற்பட்ட ஏமாற்றம் அல்லது கோபம் கூட எனது வார்த்தைகளை நியாயப்படுத்த முடியாது. இதில், உள்நோக்கம் இல்லை. நான் எப்போதும் பெண்ணியவாதிகள் பக்கம் இருப்பவன். இத்துடன் இந்த விஷயத்தை நாம் விட்டுவிடலாம் என நம்புகிறேன்’ என கூறியுள்ளார். ஆனால், ‘அவரது மன்னிப்புக் கடிதத்தின் தோரணை உண்மையாகவே மன்னிப்பு கோரும் விதத்தில் இல்லை, அதில் நக்கலும் நையாண்டித்தனமுமே உள்ளது. எனவே, அவர் மீதான வழக்கை தொடர்ந்து நடத்தி அவருக்கு தண்டனை பெற்றுத் தருவதுதான் இதுபோன்றவர்களுக்கு ஒரு பாடத்தை தரும்’ என பொதுமக்கள் சமூக ஊடகங்களில் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.