உடான் திட்டம் புதிய மைல்கல்

மத்திய அரசு துவங்கிய உடான் திட்டம், விமான பயணங்கள் சாதாரண மக்களுக்கும் எட்டும் வகையில் அதன் கட்டணங்களை மலிவு விலையில் கிடைக்க வைப்பதற்காக ஒரு அற்புத முயற்சி. பாரதத்தின் விமானச் சந்தையில் ஒரு புதிய அடித்தளத்தை அமைத்த உடான் திட்டத்தின் கீழ், தற்போது 361 வழித்தடங்கள், 59 விமான நிலையங்கள் (ஐந்து ஹெலிபோர்ட் மற்றும் இரண்டு நீர் ஏரோட்ரோம்கள் உட்பட) செயல்பட்டு வருகின்றன. இதுவரை விமான போக்குவரத்தில் இணைக்கப்படாத நாட்டின் பல மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் இதனால் இணைக்கப்பட்டுள்ளன.

அவ்வகையில் இத்திட்டத்தின் கீழ், வடகிழக்கு மாநிலங்களான இம்பால் (மணிப்பூர்) மற்றும் ஷில்லாங் (மேகாலயா) இடையேயான முதல் நேரடி விமானப் போக்குவரத்து துவங்கப்பட்டது. இதற்கான ஏலத்தில் இண்டிகோ விமானம் தேர்வாகியது. இதனால் இம்பால் ஷில்லாங் இடையே 60 நிமிடங்களில் பயணிக்க முடியும். சாலை வழியே இது 12 மணி நேர பயணம். அழகான மலைகளால் சூழப்பட்ட ஷில்லாங் பல புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களை கொண்டுள்ளது. மேகாலயாவின் நுழைவாயிலாகவும், சிறந்த சுற்றுலாத் தலமாகவும் திகழ்கிறது.