வீடுகளுக்கு ரேஷன், முடக்கியதா மத்திய அரசு?

டில்லியில் வீடுகளுக்கு நேரில் சென்று ரேஷன் பொருட்களை வினியோகிக்கும் திட்டத்தை மத்திய அரசு முடக்கி உள்ளதாக ஆம் ஆத்மி கட்சியினர் குற்றச்சாட்டுத் தெரிவித்துள்ளனர். ஆனால், டெல்லியை ஆளும் கெஜ்ரிவால் அரசு, இதில் உள்ள பல உண்மைகளை மறைத்துவிட்டு வழக்கம்போல, பழியை மத்திய அரசு மீது சுமத்துகிறது.முன்னதாக, ரேஷன் கார்டு கொடுக்கும் சாக்கில் ஆம் ஆத்மி தலைவர் சந்தீப் குமார் ஒரு பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது.அதனால், அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதும் அனைவரும் அறிந்ததே.

பல வருடங்களாக ரேஷன் மாபியாக்களுடன் தான் தொடர்ந்து போராடுவதாக கூறிக்கொள்ளும் கெஜ்ரிவால், கடந்த 2018ல் சுமார் 2,000 நியாய விலைக் கடைகளில் நிறுவப்பட்ட பாயிண்ட் ஆப் சேல் கருவிகளை சத்தமில்லாமல் நீக்கிவிட்டார். இதனால் மத்திய அரசுக்கு உணவு தானியங்களின் தேவை குறித்த தகவல்கள் கிடைக்கவில்லை.ஆதாருடன் ரேஷன் கார்டுகளை முழுவதுமாக இணைக்கவில்லை.இப்படி, மத்திய அரசுக்கு உரிய தகவல்கள் சென்று சேராமலும் கள்ள சந்தையில் ரேஷன் பொருட்களை விற்கவும் மறைமுகமாக உதவியுள்ளார் கெஜ்ரிவால்.

மத்திய அரசின் தொடர் வற்புறுத்தலுக்குப் பிறகே பாயிண்ட் ஆப் சேல் கருவிகளை மீண்டும் நிறுவியுள்ளார்.முக்கியமாக, டெல்லியில் ‘ஒரு தேசம் ஒரு ரேஷன் கார்டு’ திட்டத்தை கெஜ்ரிவால் செயல்படுத்தவில்லை.இதனால், அங்குள்ள புலம் பெயர்ந்து வேலை செய்வோருக்கு உரிய உணவு தானியங்கள் கிடைப்பதிலை. இது போன்ற காரணங்களால் மத்திய அரசுக்கு டெல்லியில் உணவு தானியங்களின் தேவை, கையிருப்பின் அளவு உள்ளிட்ட முக்கிய தரவுகள் எதுவும் கிடைப்பதில்லை என்பதுதான் இதில் உள்ள முக்கிய பின்னடைவு.

இந்நிலையில், கெஜ்ரிவாலின் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள மத்திய அரசு, ‘டெல்லி அரசு அவர்கள் விரும்பும் வழியில் ரேஷன் விநியோகிப்பதை தடுத்து நிறுத்தவில்லை.எந்தவொரு திட்டத்தின் கீழும் உணவு தானியங்களை விநியோகிக்கும் உரிமை மாநிலங்களுக்கு உண்டு.ஆனால், அதற்காக மத்திய அரசின் ‘பான் இந்தியா’ திட்டத்தை எந்த ஒரு மாநிலமும் சீர்குலைக்க முயற்சிக்கக்கூடாது.மத்திய அரசு அனைத்து மாநிலங்களையும் ஒன்றாகவே கருதுகிறது.

கோரப்பட்டால் மாநிலத்திற்கு கூடுதல் ரேஷன் பொருட்களை மத்திய அரசு வழங்கத் தயாராக உள்ளது. டெல்லிக்கு, ‘பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா’ (பி.எம்.ஜி.கே.ஏ) திட்டத்தின் கீழ் ஏற்கனவே 63,200 மெட்ரிக் டன் ரேஷனை மத்திய அரசு உயர்த்தி வழங்கியுள்ளது. இது 176 சதவீத அதிக ஒதுக்கீடு. இதில் 73 சதவீதத்தை டெல்லி அரசு மக்களுக்கு வினியோகித்தும் உள்ளது’ என தெரிவித்துள்ளது. டெல்லியின் துணை நிலை ஆளுனர் அந்த திட்டத்தை மறுபரிசீலனை செய்ய கூறினாரே தவிர நிராகரிக்கவில்லை என்பதுதான் உண்மை.

இப்படி, அனைத்துத் தவறுகளையும் தன் மீது வைத்துக்கொண்டு, அவற்றை மறைத்துவிட்டு, மத்திய அரசை குற்றம் கூறுவதையே தன் தினசரி தொழிலாக செய்து வருகிறார் டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால்.

 

மதிமுகன்