அழகிரி கல்லூரி மாணவர் கடிதம்

சிதம்பரத்திலுள்ள தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரிக்குச் சொந்தமான ‘காமராஜர் மெரைன் சயின்ஸ் அன்டு டெக்னாலஜி’ கல்லூரியில் 2019-ல் டிப்ளமோ படிப்பில் சேர்ந்துள்ள அரிஹரசுதன் என்ற மாணவர், கே.எஸ். அழகிரி, முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், எம்.பி.க்கள் திருநாவுக்கரசர், மாணிக்கம்தாகூர், கார்த்திக் சிதம்பரம், ஜோதிமணி உள்ளிட்ட கட்சியின் மூத்த நிர்வாகிகளுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளார். அதில் ‘எனது பெற்றோர் தினக்கூலி வேலை செய்யும் சூழலில், நான் கே.எஸ்.அழகிரியின் கல்லூரியில் சேர்ந்து படித்தேன். கல்லூரியில் சரியான கட்டமைப்பு வசதி இல்லை என மும்பையிலுள்ள கப்பல்துறை இயக்குநரகம் அதன் உரிமத்தை ரத்து செய்தது. ஏழை மாணவர்களை கல்லூரியில் சேர்த்து பணம் வாங்கிக் கொண்டு, செல்லாத சான்றிதழ்களை வழங்கினீர்கள். நீதிமன்றம் கல்விக் கட்டணத்தில் 50 சதவீதத்தை திருப்பி வழங்க உத்தரவிட்டும் இதுவரை வழங்கவில்லை. எனது தந்தை புற்றுநோயால் அவதிப்படுகிறார். தாயார் தினக்கூலிக்கு சென்று குடும்பத்தை கவனிக்கிறார். நான் வேலைக்கு போக முடியவில்லை. என்னைப் போன்றே பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். நீதிமன்ற உத்தரவுப்படி வேறு கல்லூரியில் படிக்க உதவி செய்வதோடு, நாங்கள் செலுத்திய கட்டணத்தில் 50 சதவீதத்தை திரும்ப வழங்க வேண்டும். தமிழக காங்கிரஸ்காரர்களான நீங்கள், ராகுலிடம் இத்தகவலை தெரிவித்து எங்களுக்கு நியாயம் கிடைக்க வழி செய்யுங்கள்’ என்று அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.