9 பேரை எரித்து கொன்ற கயவர்கள் – ஐதராபாத்தில் ‘பகீர்’

ஐதராபாத் : ஐதராபாத்தில் பெண் டாக்டரை பலாத்காரம் செய்து, எரித்து கொன்ற குற்றவாளிகள் இதே போன்று மேலும் 9 பேரை எரித்து கொன்றதாக என்கவுன்டர் செய்யப்படுவதற்கு முன் வாக்குமூலம் அளித்துள்ள தகவல் தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஐதராபாத்தில் பணி முடிந்து திரும்பி பெண் டாக்டரை 4 பேர் கொன்ற கும்பல் பாலியல் பலாத்காரம் செய்து, எரித்து கொலை செய்தது. இச்சம்பவம் நாடு முழுவதம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் 4 பேரிடம் போலீசார் நடத்தி, வாக்குமூலம் பெற்றனர். பின்னர் விசாரணைக்காக சம்பவம் நடந்த இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட போது, போலீசாரை தாக்கி விட்டு, தப்பி ஓட முயன்றனர். இதனால் தற்காப்பிற்காக போலீசார் சுட்டதில், 4 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். குற்றவாளிகளை என்கவுன்டர் செய்ததற்காக போலீசார் பலர் பாராட்டினாலும், எதிர்ப்புக்களும் ஒரு புறம் எழுந்தது. இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கும் நடந்து வருகிறது.

இந்நிலையில் என்கவுன்டர் செய்யப்பட்ட 4 பேரில் 2 பேர் அளித்த வாக்குமூலம் தொடர்பான தகவலை போலீசார் தற்போது வெளியிட்டுள்ளார். இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.இதில் முக்கிய குற்றவாளிகளான முகம்மது ஆசிப் மற்றும் சின்னகுண்டா சென்னகேசவலு ஆகியோர் அளித்த வாக்குமூலத்தின்படி, பெண் டாக்டரை கொன்றது போன்று மேலும் 9 பேரை பாலியல் பலாத்காரம் செய்து எரித்து கொன்றது தெரிய வந்துள்ளது. இவற்றில் 3 பேர் தெலுங்கானாவின் பல்வேறு மாவட்டங்களிலும், கர்நாடக-தெலுங்கானா எல்லையில் 6 பேரையும் எரித்துக் கொன்றுள்ளனர். இவர்களில் சென்னகேசவலுவுக்கு இதே போன்ற 15 குற்றங்களில் தொடர்பு இருப்பதும் தெரிய வந்துள்ளது.

அனைத்து வழக்குகளிலம் இவர்கள் நெடுஞ்சாலை ஓரம் உடல்களை எரித்தது தெரிய வந்துள்ளது. இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்திய போது, குற்றவாளிகளின் மொபைல் போன் சிக்னல்கள் காட்டிய இடமும், அந்த வழக்குகளில் தொடர்புடைய இடங்களும் ஒத்துபோய் உள்ளது. பாலியல் தொழிலாளர்கள், அப்பாவி பெண்கள், திருநங்கைகள் உள்ளிட்ட 9 பேரை பலாத்காரம் செய்து, சித்தரவதை செய்து, எரித்து கொன்றது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.