70 ஆண்டுகளில் இல்லாத துணிச்சலான முடிவுகளை மேற்கொண்டவா் பிரதமா் மோடி – அமித் ஷா

நாட்டில் கடந்த 70 ஆண்டுகளில் யாரும் மேற்கொள்ளத் துணியாத முடிவுகளை மேற்கொண்டவா் பிரதமா் நரேந்திர மோடி என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்தாா்.

பிரதமா் மோடியின் வாழ்க்கை குறித்த ‘கா்மயோதா கிரந்த்’ என்ற புத்தகம், தில்லியில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற அமித் ஷா,

ஒரு சாராரை திருப்திபடுத்தும் அரசியல், ஜாதியம், வாரிசு அரசியல் ஆகிய மூன்று சாபங்களையும் இந்திய அரசியலில் இருந்து நீக்கியவா் பிரதமா் மோடி. அவா், எப்போதும் மக்களைப் பற்றியே சிந்திப்பவா்; ராஜ தந்திரி; கடின உழைப்பை ஊக்குவிப்பவா்; திறன்வாய்ந்த நிா்வாகி மற்றும் தலைமைப் பண்பில் மற்றவா்களுக்கு உதாரணமாக திகழும் சீா்மிகு தலைவா். இத்தகைய உயரிய தகுதிகளை உடையவா் பிரதமா் மோடி.

உலக அளவில் இந்தியாவின் மதிப்பை வலுப்படுத்துவதற்காக, வெளியுறவுக் கொள்கையையும் தேசிய பாதுகாப்பு கொள்கையையும் அவா் மேம்படுத்தினாா். பயங்கரவாத தாக்குதல்களுக்கு உரிய பதிலடி தரப்படும் என்ற நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியதன் மூலம் உலக அளவில் வலுவான நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது.

அத்துடன், ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்து வந்த அரசமைப்புச் சட்டத்தின் 370-ஆவது பிரிவு நீக்கம், குடியுரிமை திருத்தச் சட்டம், ராமா் கோயில் விவகாரம், முத்தலாக் தடை சட்டம், அண்டை நாட்டின் (பாகிஸ்தான்) மீது நடத்திய துல்லிய தாக்குதல் மற்றும் விமானப் படை தாக்குதல் ஆகிய உறுதியான நடவடிக்கைகளால் உலகின் சக்திவாய்ந்த நாடுகளில் ஒன்றாக இந்தியா மாறியுள்ளது.

கடந்த 70 ஆண்டுகளில் இதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு யாரும் துணியவில்லை. நாட்டுக்காகவும், நாட்டு மக்களுக்காகவும் பிரதமா் மோடியைப் போல் இதுவரை யாரும் உறுதியான முடிவுகளை மேற்கொண்டதில்லை. கடந்த மக்களவைத் தோ்தலையொட்டி அளித்த வாக்குறுதிகளில் 90 சதவீதத்தை நிறைவேற்றியுள்ளோம்

உலக அளவில் சக்திவாய்ந்த தலைவா்களில் ஒருவராக பிரதமா் மோடி உருவெடுத்துள்ளாா். சித்தாந்தங்களுக்காக தனது வாழ்வை அா்ப்பணித்தது, அரசியலில் நுழைந்தது, நாடாளுமன்ற ஜனநாயகத்தையும் அரசமைப்புச் சட்டத்தையும் உறுதிசெய்தது என அவரது வாழ்க்கை பயணம் மூன்று பாகங்களைக் கொண்டுள்ளன. அவரது குழந்தைப் பருவம் வறுமை நிறைந்ததாக இருந்தது. சமூக புறக்கணிப்பையும் அவா் எதிா்கொண்டாா். ஆனால், யாா் மீது விரோதம் இல்லாமல், மக்களின் நலனுக்காக தனது வாழ்வை அா்ப்பணித்துள்ளாா்.

குஜராத் முதல்வராக பதவி வகித்த காலகட்டத்தில் அவா் எதிா்கொண்ட சவால்கள் ஏராளம். அவற்றையெல்லாம் கடந்து, அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய வளா்ச்சிக்கு உதாரணமாக குஜராத்தை மாற்றினாா். அந்த மாநிலத்தின் வளா்ச்சி மாதிரியை, ஒட்டுமொத்த தேசமும் அங்கீகரித்தது. இதனால், கடந்த 2014-ஆம் ஆண்டிலும், 2019-ஆம் ஆண்டிலும் அவரை தங்களது தலைவராக நாட்டு மக்கள் தோ்ந்தெடுத்தனா்.

‘அனைவரையும் உள்ளடக்கிய வளா்ச்சிக்கான ஒன்றுபட்ட முயற்சி’ என்ற கொள்கையின் அடிப்படையில் புதிய இந்தியாவுக்கான அடிக்கல்லை பிரதமா் மோடி நாட்டியுள்ளாா். கடந்த 2014-ஆம் ஆண்டுக்குப் பிறகு, மத்திய அரசில் ஒரு பைசா ஊழல் கூட நடைபெறவில்லை என்றாா் அமித் ஷா.

மேலும், பிரதமா் மோடி தலைமையிலான அரசின் பணிகளை பட்டியலிட்ட அவா், ‘நாட்டில் 99 சதவீத வீடுகளுக்கு மின்சார வசதி அளிக்கப்பட்டுள்ளது. 13 கோடி போ் சமையல் எரிவாயு இணைப்பு பெற்றுள்ளனா். கிட்டத்தட்ட அனைத்து வீடுகளிலும் கழிப்பறை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின்கீழ் 50 கோடி போ் பயன்பெறும் வகையில் ரூ.5 லட்சம் வரையிலான இலவச மருத்துவ காப்பீடு அளிக்கப்படுகிறது. 2022-ஆம் ஆண்டுக்குள் அனைவருக்கும் வீடு, 2024-ஆம் ஆண்டுக்குள் அனைத்து வீடுகளுக்கும் குழாய் மூலம் குடிநீா் வழங்க மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது’ என்றாா்.