32 ஆண்டுகளுக்குப் பின் வரலாறு

பஞ்சாப், அசாம், திரிபுரா, நாகாலாந்து, ஹிமாச்சல பிரதேசம் உள்ளிட்ட 6 மாநிலங்களில் காலியாகும் 13 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கு சமீபத்தில் தேர்தல் நடைபெற்றது. இதில், நாகாலாந்து, இமாச்சல பிரதேசத்தில் தலா ஒரு உறுப்பினர் பதவியை போட்டியின்றி  பா.ஜ.க கைப்பற்றியது. அசாமில் 2 உறுப்பினர்கள், திரிபுராவில் ஒரு உறுப்பினர் பதவியை வென்றது. இதனால் மாநிலங்களவையில் பாஜகவின் பலம் 100 ஆக உயர்ந்துள்ளது. இதன்மூலம் 1990க்கு பிறகு 100 உறுப்பினர்களை கடந்த முதல் கட்சி என்ற பெருமையை பா.ஜ.க பெற்றுள்ளது. 2014ல் மாநிலங்களவையில் பா.ஜ.கவின் பலம் 55 ஆக இருந்தது. அதன்பின்னர் பல மாநிலங்களில் அக்கட்சி ஆட்சியை கைப்பற்றியதால் மாநிலங்களவை உறுப்பினர்கள் எண்ணிக்கையும் படிப்படியாக உயர்ந்தது. கடைசியாக 1990ல் காங்கிரஸ் கட்சி, மாநிலங்களவையில் 100 உறுப்பினர்கள் என்ற மைல்கல்லை கடந்து, 108 உறுப்பினர்களைக் கொண்டிருந்தது. ஆனால், அதன் பிறகு பல்வேறு மாநிலங்களில் மெல்ல கரைந்து வந்த காங்கிரஸ், அதன் குழ்ப்பமான தலைமை, உட்கட்சி பூசல்கள், தொடர் தோல்விகளால் மாநிலங்களவை உறுப்பினர்களை இழந்து வருகிறது.