2024 அனைவருக்கும் அற்புதமான ஆண்டாக அமையட்டும்: பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து

உலகம் முழுவதும் இன்று (ஜனவரி 1) ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாடப்படுவதை ஒட்டி பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். எக்ஸ் சமூகவலைதளத்தில் அவர் பகிர்ந்துள்ள பதிவில், “2024 அனைவருக்கும் அற்புதமான ஆண்டாக அமையட்டும். இந்த புத்தாண்டு அனைவருக்கும் வளம், அமைதி மற்றும் ஆரோக்கியத்தை நல்கும்” என்று வாழ்த்திப் பதிவிட்டுள்ளார்.

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி எக்ஸ் பக்கத்தில், “இந்த புத்தாண்டு அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சியையும், வளத்தையும் நல்கும். தேசத்தில் அன்பும், நியாயத்தின் செய்தியும் ஓங்கட்டும்” என்று தெரிவித்துள்ளார். முன்னதாக, புத்தாண்டை முன்னிட்டு ராகுல் காந்தியும் அவரது தாயார் சோனியா காந்தியும் இணைந்து தங்கள் வீட்டில் ஆரஞ்சு ஜாம் தயாரிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலா

நாடு முழுவதுமே ஆங்கிலப் புத்தாண்டு உற்சாகமாகக் கொண்டாடப்படுகிறது. பெருநகரங்களில் நள்ளிரவு கொண்டாட்டங்கள் களைகட்டின. தமிழகத்தில் இன்று அதிகாலை தொடங்கி கோயில்களில் மக்கள் திரண்டு வழிபாடு செய்தனர். முன்னதாக, நியூசிலாந்தின் ஆக்லேண்ட் நகரம் 2024 புத்தாண்டு வரவேற்கும் உலகின் முதல் நகரமாக மாறியது. ஆக்லேண்ட் நகரில் 328 மீட்டர் (1,706 அடி) உயரத்திலுள்ள கண்காணிப்பு மற்றும் தொடர்பு கோபுரத்தில் அமைந்துள்ள டிஜிட்டல் டிஸ்ப்ளேவில் புத்தாண்டுக்கான கவுண்டவுன் தொடங்கியது. புத்தாண்டு பிறந்ததும் வாண வேடிக்கையுடன் மக்கள் மகிழ்ச்சி ஆரவாரத்தில் திளைத்தனர்.