100 மசூதி, தர்க்காக்களில் மனதின் குரல் ஒலிபரப்பு

ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிறு அன்று பிரதமரின் மனதின் குரல் வானொலி நிகழ்ச்சி ஒலிபரப்பாகி வருகிறது. இதன் 100வது நிகழ்ச்சி இம்மாதம் 30ம் தேதி ஒலிபரப்பாக உள்ளது. இந்நிகழ்ச்சியை சிறப்பிக்கும் நோக்கில், உத்தரப் பிரதேசத்தில் உள்ள மசூதிகள், தர்காக்கள் என முஸ்லிம்களுடன் தொடர்புடைய 100 இடங்களில் ஒலிபரப்ப அம்மாநில பா.ஜ.க திட்டமிட்டுள்ளது. இது குறித்து ஊடகம் ஒன்றிடம் கருத்துத் தெரிவித்த உத்தரப் பிரதேச பா.ஜ.க சிறுபான்மைப் பிரிவு தலைவர் குன்வர் பசித் அலி, ”பிரதமர் மோடியின் 100வது மனதின் குரல் நிகழ்ச்சியை வரலாற்றுச் சிறப்பு மிக்கதாக மாற்ற திட்டமிட்டு வருகிறோம். இதன் ஒரு பகுதியாக, முஸ்ளிம் சமூகத்தோடு தொடர்புடைய 100 இடங்களில் பிரதமரின் 100வது மனதின் குரல் நிகழ்ச்சியை ஒலிபரப்ப திட்டமிட்டுள்ளோம். சுமார் 60 மசூதிகள், 30 தர்காக்கள், முஸ்ளிம் அறிஞர்கள் மற்றும் மக்களின் சபையான மஜ்லிஸ்கள் ஆகியவற்றில் இந்த 100வது மனதின் குரல் நிகழ்ச்சி ஒலிபரப்பப்படும். மேலும், கடந்த 2022ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி நிகழ்த்திய 12 மனதின் குரல் நிகழ்ச்சிகளின் உருது மொழிபெயர்ப்பு புத்தகம் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. இதன்மூலம் நமது நாடு குறித்த பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையை மக்களிடம் நேரடியாக கொண்டு செல்ல முயற்சி செய்கிறோம். இந்தப் புத்தகங்கள் முஸ்ளிம் மத அறிஞர்களுக்கு வழங்கப்படும். இதற்கான விழா வரும் 30ம் தேதி லக்னோவில் பிரமாண்டமாக நடத்தப்படும்” என தெரிவித்தார்.