ஹிந்து, முஸ்லிம் தொழிலாளர் கைவண்ணம் – ராமர் கோவிலுக்காக 2,100 கிலோ மணி

உ.பி.,யில் உருவாகும் ராமர் கோவிலுக்கு, அம்மாநிலத்தின் ஜலேசரில், ஹிந்து, முஸ்லிம் தொழிலாளர்களின் பங்களிப்புடன், நாட்டிலேயே மிகப்பெரிய, 2,100 கிலோ எடையுள்ள மணி உருவாக்கப்பட்டுள்ளது.

உ.பி.,யில், மாநிலம் அயோத்தியில், ராமர் கோவில் கட்டுவதற்கு, கடந்த, 5ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்.

மெருகேற்றும் பணி

இம்மாநிலத்தின் ஜலேசர் நகரில், ஹிந்து குடும்பத்தினரின் பட்டறையில், முஸ்லிம் கைவினை கலைஞர்களின் பங்களிப்புடன், ராமர் கோவிலுக்காக, 2,100 கிலோ எடையுள்ள, நாட்டின் மிகப்பெரிய மணியை தயாரித்திருப்பது, அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

இது குறித்து, மணி தயாரிப்பில், 30 ஆண்டுகளாக ஈடுபட்டு வரும், தவ் தயாள், 50 மற்றும் ஐந்து தலைமுறைகளாக, இந்த பணியில் உள்ள குடும்பத்தை சேர்ந்தவரும், மணியை வடிவமைத்தவருமான, இக்பால் மிஸ்திரி, 56, ஆகியோர் கூறியதாவது: இங்குள்ள முஸ்லிம் சகோதரர்கள், மணிகளை வடிவமைப்பது, மெருகேற்றுவது உள்ளிட்ட பணிகளில் சிறப்பு வாய்ந்தவர்கள். அச்சம்நாட்டின் மிகப்பெரிய மணியை உருவாக்குவதில், பல்வேறு சிரமங்கள் இருந்தன.

ராமர் கோவிலுக்கான இந்த மணியை உருவாக்குவது உற்சாகம் அளித்தாலும், தவறு நேர்ந்துவிடக்கூடாது என்ற அச்சம் இருந்தது. பெரிய மணியை உருவாக்குவதில், வெற்றி எளிதல்ல. உருக்கப்பட்ட உலோகத்தை அச்சில் வார்க்கும் போது, 5 வினாடிகள் தாமதித்தாலும், அனைத்தும் வீணாகிவிடும். இந்த மணியில், துண்டுகள் எதுவும், ‘வெல்டிங்’ செய்யப்படவில்லை. தலை முதல் அடி வரை, ஒரே அச்சில் வார்க்கப்பட்டது; இதுவே, பணியை மேலும் கடினமாக்கியது.

நன்கொடை

ராமர் கோவிலுக்காக உருவான மணி, வெண்கலத்தால் ஆனதல்ல. தங்கம், வெள்ளி, தாமிரம், துத்தநாகம், ஈயம், தகரம், இரும்பு மற்றும் பாதரசம் ஆகிய, எட்டு உலோகங்களின் கலவையால் செய்யப்பட்டது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

ஜலேசர் நகரசபை தலைவரும், இந்த மணியை உருவாக்கிய பட்டறை உரிமையாளருமான, விகாஸ் மிட்டல் கூறியதாவது:அயோத்தியில், ராமர் கோவில் கட்டுவதற்கான வழக்கில் ஆஜரான வழக்கறிஞர், நிர்மோஹி அகாராவிடம் இருந்து, 2,100 கிலோ எடையுள்ள, மணியை தயாரிக்கும் பணி கிடைத்தது. இந்த வேலை எங்களுக்கு வந்ததற்கு, சில தெய்வீக காரணங்கள் இருப்பதாக நம்புகிறோம். எனவே, 21 லட்சம் ரூபாய் செலவில் உருவான மணியை, கோவிலுக்கு நன்கொடையாக வழங்க முடிவு செய்தோம்.

திட்டமிட்ட நாளில் இருந்து, மணியை உருவாக்கி முடிக்க, நான்கு மாதங்கள் ஆனது. கோவிலுக்கு அனுப்பி வைக்கப்படும் முன், மெருகேற்றும் பணிகள் நடைபெறும். நாட்டின் மிகப்பெரிய மணியை உருவாக்க, ஹிந்துக்கள், முஸ்லிம்கள் உள்ளிட்ட, 25 தொழிலாளர்கள், ஒரு மாத காலம், தினந்தோறும், எட்டு மணி நேரம் உழைத்துள்ளனர்.

இதற்கு முன், மஹா.,வின் உஜ்ஜயினியில் உள்ள கோவிலுக்கு, 1,000 கிலோ மணி, உத்தரகண்டின் கேதார்நாத் கோவிலுக்கு, 101 கிலோ மணியை, நாங்கள் உருவாக்கி உள்ளோம்.இவ்வாறு, அவர் கூறினார்.