ஸ்டாலின் திறந்து வைத்த 20 நாளில் அரசு பள்ளி கூரை 2 முறை ‘டமார்’

கிருஷ்ணகிரி மாவட்டம், பேகேப்பள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், 279 மாணவ – மாணவியர் படிக்கின்றனர். தலைமை ஆசிரியராக கவுரம்மா உள்ளார். பள்ளிக்கு, குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தில், 1.01 கோடி ரூபாய் மதிப்பில், தரைதளம், முதல் தளத்தில் தலா மூன்று வகுப்பறைகள் கட்டப்பட்டன.

கூடுதல் வகுப்பறை கட்டட பணிகளை, பிரவீன் என்பவர் டெண்டர் எடுக்க, ‘கற்பக விநாயகா’ என்ற நிறுவனம் கட்டுமான பணியை மேற்கொண்டது. இந்த நிறுவனத்தை, ஓசூர் தி.மு.க., – எம்.எல்.ஏ., பிரகாஷிற்கு நெருக்கமானவர் நடத்தி வருகிறார். கட்டுமான பணி நடந்த போது, தரமில்லை என, அப்பகுதி அ.தி.மு.க., ஒன்றிய கவுன்சிலர் முரளி உள்ளிட்டோர் குற்றம் சாட்டினர்; அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை.

பணிகள் முடிந்து, கடந்த மாதம், 26ல் முதல்வர் ஸ்டாலின், காணொலி வாயிலாக பள்ளி கட்டடத்தை திறந்து வைத்தார். கடந்த, 3ம் தேதியும், நேற்று காலையிலும் பள்ளி கூரையின் சிமென்ட் பூச்சு உடைந்து விழுந்தது. மாணவ – மாணவியர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். முதல்வர் திறந்த, 20 நாளில் இருமுறை புதிய கூரை இடிந்து விழுந்துள்ளது. தகவல் அறிந்து ஓசூர் பி.டி.ஓ., சீனிவாசமூர்த்தி, உதவி பொறியாளர் மாது ஆகியோர் ஆய்வு செய்தனர். விழுந்த சிமென்ட் பூச்சுகள் அகற்றப்பட்டன. இந்த கட்டடத்தை இடித்து விட்டு, தரமான கட்டடம் கட்ட பெற்றோர் கோரிக்கை விடுத்துஉள்ளனர்.