வேல் யாத்திரை, ரஜினி பிரவேசம்; புயலுக்கு பின் புயல்

“ஜனவரியில் கட்சி ஆரம்பிக்கப்போவதாக” டிசம்பர் 3 அன்று ரஜினிகாந்த் அறிவித்து அதிர்வலைகளை எழுப்பிய போதும் கூட, உள்துறை அமைச்சரும் தேர்தல் வியூக நிபுணருமான அமித் ஷா நவம்பர் 21 அன்று சென்னை வந்த போது அதிமுக – பாஜக கூட்டணியில் பெரிய கட்சியான அதிமுக தானாக முன்வந்து 2019 லோக்சபா தேர்தல் கூட்டணி, அதாவது அதிமுக — பாஜக கூட்டணி, தொடர்கிறது என்றும் அந்தக் கூட்டணி 2021 சட்டமன்ற தேர்தலில் மாநில ஆட்சியை கைப்பற்றும் என்றும் அறிவித்த
தால் ஏற்பட்ட அதிர்வலைகள்  தணிந்து போய்விடவில்லை.
பாஜக மாநிலத் தலைவர் டாக்டர் எல். முருகன் வெற்றிவேல் யாத்திரை தொடங்கிய போது, கொரோனாவைக்  காரணம் காட்டி காவல்துறை விதித்த தடையை மீறி கைதானார். கைதைக் கண்டித்து எல்லா மாவட்டங்களிலும் நடந்த கண்டன ஆர்ப்பாட்டங்களில்  கைதான பாஜகவினர் வழக்கம்போல நூற்றுக்கணக்கில் அல்லாமல் ஆயிரக்கணக்கில் என்பதை மாநில உளவுத்துறை  குறித்துக்கொண்டு “அதிமுக, தி.மு.கவுக்குப் போட்டியாக பா.ஜ.வுக்கு மக்களிடையே வரவேற்பு அதிகரித்துள்ளது” என்று மாநில அரசுக்கு தகவல் தந்தது. “ஹிந்து அமைப்புகள் திட்டத்தால் பா.ஜ.வின் வேல் யாத்திரைக்கு கூட்டம் அதிகரித்து வருகிறது” என்பது உளவுத் துறையின் கூடுதல் தகவல்.
திமுக, பலவீனமாகவேனும், வரிந்து கட்டுவது; தினகரன் – சசிகலா நிழல் தென்படுவது; இரட்டைத் தலைமை எழுப்பிய உள்கட்சிக் கேள்விகள் … இவற்றால் தள்ளாடிக்கொண்டிருந்த அதிமுக, தனது ஜூனியர் கூட்டணி பார்ட்னரான பாஜகவுக்கு மகிழ்ச்சி தரும் செய்தியை வீட்டு வாசல் படி ஏறி கொடுத்துவிட்டு வந்தது ஆச்சரியமில்லை.
அது அதிமுகவின் தலைவலி. ஆனால் நவம்பர் 6 அன்று மட்டும் தமிழகமெங்கும் கைதான பாஜகவினர் 44,000 பேர் என்று  பாஜக வட்டாரம் தெரிவித்தது, சில கேள்விகளை எழுப்பியது.  இரண்டு வாரங்களுக்கு முன்பு வரை எங்கே பிஜேபி என்று கிண்ட
லடித்துக் கொண்டிருந்தவர்கள் ஆச்சரியத்தில் மூழ்கினார்கள். ’அது எப்படி திடீரென இவ்வளவு பலம் இந்த தாமரைக் கட்சிக்கு?’ என்று அவர்களுக்கு புரியவில்லை. அமித் ஷா சென்னை வந்துபோன  மறுநாள், “தமிழ்நாட்டு அரசியலில் அதிர்ச்சி கலந்த ஒரு ஆச்சரிய அத்தியாயம்” என்று தொடங்கி,  ‘த இந்து’ தமிழ் திசை நாளிதழ்,  “இதுநாள் வரை தேர்தல் என்றால் அதிமுக vs திமுக என்பதுதான் வாடிக்கை. இனி அப்படி அல்ல, பாஜக vs திமுக என்பது புதிய காட்சி” என்று  விமர்சனம்  செய்தது. தமிழகத்தில் திராவிட புரட்டு  ஒழியாதா பிரிவினைவாதக் கூச்சல் அடங்காதா கழகங்கள் இல்லாத தமிழகம் காண்போமா? தேசியத் தாமரை தமிழகத்தில்  மலருமா? என்றெல்லாம் தேசிய உள்ளம் கொண்டவர்கள் பல ஆண்டுகளாக எதிர்பார்த்தது இப்போது நடக்
கும் போலிருப்பதால் ஆச்சரியம் ஊடகத்திற்கும் பிற கட்சிகளுக்கும் தான்.
மூன்று தலைமுறைகளாக ஹிந்து அமைப்புகளின் பல்லாயிரம்  கார்யகர்த்தர்கள் தன்னலம் இல்லாமல், ரத்தம் சிந்திப் பாடுபட்டதன் பலன் இது என்பதால் அரசியல் அரங்கில் பாஜக பெறும் இந்த புதிய கவுரவம்  விவரமானவர்களுக்கு ஆச்சரியம் அளிக்கவில்லை.
சங்கர மகாதேவன்
மூத்த பத்திரிகையாளர், செய்தி விமர்சகர்