விவசாயிகளின் கோரிக்கையை மத்திய அரசு ஏற்க மறுப்பது ஏன்

நடப்பு பட்ஜெட்டில், அரசின் மொத்த செலவினம், 45 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. அனைத்து விவசாய பொருட்களுக்கும், குறைந்தபட்ச ஆதரவு விலை அளித்தால், அதற்காக மட்டும், 40 லட்சம் கோடி ரூபாய் கூடுதலாக செலவிட நேரிடும் என, புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. விவசாயிகள் உற்பத்தி செய்யும் அனைத்து விவசாயப் பொருட்களுக்கும், எம்.எஸ்.பி., எனப்படும் குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதி செய்யும் வகையில் சட்டம் இயற்ற வலியுறுத்தி, விவசாயிகள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

இது குறித்து பொருளாதார நிபுணர்கள் கூறியுள்ளதாவது:நடப்பு பட்ஜெட்டில் அரசின் மொத்த செலவினம், 45 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் விவசாயிகள் கோரிக்கையை ஏற்றால், அரசு கூடுதலாக, 40லட்சம் கோடி ரூபாயை செலவிட நேரிடும்.தற்போது, ஒரு டஜன் விவசாய பொருட்களுக்கு மத்திய அரசு, குறைந்தபட்ச ஆதரவு விலை அளிக்கிறது.

இதை சட்டப்பூர்வமாக உறுதி செய்தாலே, அரசுக்கு, 10 லட்சம் கோடி ரூபாய் கூடுதலாக செலவிட நேரிடும். இது நாடு முழுதும் மேற்கொள்ளும் உள்கட்டமைப்பு மூலதன செலவுக்கான, 11 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடுக்கு இணையாக அமைந்துவிடும். தற்போது நெல், கோதுமை உள்ளிட்டவற்றுக்கு, குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்கப்படுகிறது. கடந்த, 2022 – 2023 நிதியாண்டில், இதனடிப்படையில், 2.28 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு கொள்முதல் செய்துள்ளது.இது குறைந்தபட்ச ஆதரவு விலை உள்ள பொருட்களின் உற்பத்தியில், 25 சதவீதமாகும்.

விவசாயிகளுக்கு இரண்டு வாய்ப்புகளை அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது. இதன்படி, இந்த குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு அரசிடம் விற்கலாம் அல்லது அதிக விலை கிடைத்தால், பொது சந்தையில் விற்கலாம். குறைந்தபட்ச ஆதரவு விலை, 2014 — 2015 நிதியாண்டுடன் ஒப்பிடுகையில், 115 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. அப்போது, 1.06 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்களையே அரசு கொள்முதல் செய்திருந்தது.

அதுபோல, அப்போது, 761.40 லட்சம் டன்னாக இருந்த கொள்முதல், 38 சதவீதம் உயர்ந்து, 1,062.69 லட்சம் டன்னாக உயர்ந்தது. விவசாயிகளுக்கு தங்களுடைய பொருட்களை பொது சந்தையில் விற்பதற்கு வாய்ப்பு உள்ளது. ஆனால், அரசே அனைத்தையும் கொள்முதல் செய்ய வேண்டும் என்று கூறுகின்றனர். இதை ஏற்றால், அடுத்த ஐந்து ஆண்டில், உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடு என்ற இலக்கை எட்ட முடியாது. மேலும், நாட்டு மக்கள் மீது வரி சுமையை ஏற்ற வேண்டிய கட்டாய நிலை உருவாகும்.இந்த விஷயத்தில், மத்திய அரசு தன் நிலைப்பாட்டை மிகவும் தெளிவாக தெரிவித்துள்ளது.

குறைந்தபட்ச ஆதரவு விலை அளிக்கத் தயாராக உள்ளது; ஆனால், சட்டமாக்க முடியாது. அதுபோல, அனைத்து பொருட்களையும் இதில் சேர்க்க முடியாது என தெரிவித்துள்ளது. ஆனால், அரசியல் நோக்கத்துக்காக, காங்கிரஸ், ஆம் ஆத்மி போன்ற கட்சிகள், விவசாயிகளை தூண்டு விடுகின்றன. இவ்வாறு அவர்கள் கூறினர்.