விமானப்படை தினத்தில் பிரதமர் மோடி வாழ்த்து

விமானப் படை தினத்தை ஒட்டி விமானப் படை வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கடந்த 1932-ம் ஆண்டு அக்டோபர் 8-ம் தேதி விமானப் படை உருவாக்கப்பட்டது. இதைநினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 8-ம் தேதி விமானப் படை தினம் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு விமானப் படை தினத்தையொட்டி 11 நிமிடங்கள் ஓடும் வீடியோ வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் கடந்த ஓராண்டில் விமானப் படை செய்த சாதனைகள் விவரிக்கப்பட்டு உள்ளன. பிரதமர் நரேந்திர மோடி எக்ஸ் சமூக வலைதளத்தில் நேற்று வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:

விமானப் படை தினத்தை முன்னிட்டு அனைத்து விமானப்படை வீரர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இந்திய விமானப்படையின் வீரம், உறுதி மற்றும் அர்ப்பணிப்பு குறித்து இந்தியா பெருமிதம் கொள்கிறது. விமானப் படை வீரர்களின் மகத்தான சேவையும், தியாகமும் நமது வான் வழி பாதுகாப்பை உறுதி செய்கிறது.