வன்முறையை நிறுத்தாவிட்டால் உள்ளாட்சி தேர்தலை நிறுத்துவோம்

‘மேற்கு வங்கத்தில் வன்முறைகள் தொடர்ந்தால், உள்ளாட்சி தேர்தலை நிறுத்துவோம்’ என, கோல்கட்டா உயர் நீதிமன்றம் கடும் கோபத்துடன் குறிப்பிட்டுள்ளது.மேற்கு வங்கத்தில் அடுத்த மாதம் 8ல் உள்ளாட்சி தேர்தல் நடக்கவுள்ளது.தேர்தல் அறிவிப்பு துவங்கியதில் இருந்து, வேட்பு மனு தாக்கல் முடியும் வரை, பல மாவட்டங்களில் வன்முறை சம்பவங்கள் நடந்துள்ளன.பிரசாரங்களிலும் வன்முறை சம்பவங்கள் நடந்து வருகின்றன.இந்த வன்முறைகளில், இது வரை நான்கு பேர் கொல்லப்பட்டதாகவும், பலர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.இதைத் தவிர பொது சொத்துக்களும் கடும் சேதம் அடைந்துள்ளன.

இந்நிலையில், தேர்தலில் போட்டியிடும் சில வேட்பாளர்கள் மாயமானது தொடர்பான வழக்கை, கோல்கட்டா உயர் நீதிமன்றம் விசாரித்து வருகிறது. நேற்று நடந்த விசாரணையின்போது, நீதிமன்றம் கூறியுள்ளதாவது: உள்ளாட்சி தேர்தலில் ஏன் இந்த அளவுக்கு வன்முறை நடக்கிறது? சட்டம் – ஒழுங்கு கடுமையாக பாதிக்கப்பட்டு, மோதல்கள் அதிகளவில் நடந்து வருவது ஏன்?இது, மாநிலத்துக்கு அவமானமாகும்.இதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்.வன்முறை குறையாவிட்டால், உள்ளாட்சி தேர்தலை நிறுத்த நேரிடும்.இவ்வாறு நீதிமன்றம் கூறியது.