வந்தே பாரத் சேவையை கண்காணிக்க இருவர் நியமனம்

தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: தெற்கு ரயில்வேயில், சென்னை சென்ட்ரல் — மைசூர், சென்னை எழும்பூர் — திருநெல்வேலி, சென்னை சென்ட்ரல் — கோவை, திருவனந்தபுரம் — காசர்கோடு மற்றும் சென்னை சென்ட்ரல் — விஜயவாடா ஆகிய வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன.

இந்த ரயில்களில், ‘யாத்ரி சேவை அனுபந்த்’ என்ற திட்டத்தை செயல்படுத்த, ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் உணவு, துாய்மை பணி போன்றவற்றை கண்காணிக்க இரண்டு ஊழியர்கள் நியமிக்கப்படுவர்.விமானங்களுக்கு இணையான சேவையை, வந்தே பாரத் ரயில்களில் வழங்க திட்டமிட்டுள்ளோம். இந்த திட்டம் விரைவில் பயன்பாட்டிற்கு வரும் போது, பயணியரின் சேவை மேம்படுத்தப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.