‘ரேஷன் அரிசி கடத்தல் கும்பலை உடனே கைது செய்ய வேண்டும்’

துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் ரேஷன் அரிசி கடத்தும் கும்பல், வழக்கறிஞர் ஒருவர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட பாம்பு கார்த்திக் என்ற தி.மு.க.,வை சேர்ந்த நபர், கடந்த ஆண்டே ரேஷன் அரிசி கடத்தல் வழக்கில், போலீசாரால் தேடப்பட்டு வந்தவர்.

தி.மு.க., தலைமைக்கும், அமைச்சர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் நெருக்கமான நபராக அறியப்படும் கார்த்திக், ஒவ்வொரு வீட்டில் இருந்தும் ரேஷன் அரிசியை வாங்க வேண்டும் என்று சிறுவர்களை கட்டாயப்படுத்துவதாக தெரிகிறது. அதை தட்டி கேட்ட வழக்கறிஞர் மாரிசெல்வம் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசியதாகவும் தெரிகிறது. கோவில்பட்டி சுற்று வட்டாரத்தில் மட்டும் மாதம், 3.50 டன் ரேஷன் அரிசி வெளி மாநிலங்களுக்கு கடத்தப்படுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

கடந்த ஆண்டு இந்த பகுதியில், ரேஷன் அரிசி கடத்தல் விவகாரத்தில் துரைபாண்டி என்பவர் கொலை செய்யப்பட்டுள்ளார். எனினும், தொடர்ந்து அரிசி கடத்தல் நடந்து வருவது, கடத்தல்காரர்களின் பின்புலத்தை காட்டுகிறது. ஆளுங்கட்சி என்பதால் போலீசாரோ, உணவு கடத்தல் தடுப்பு பிரிவோ எந்த நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை.

பிரதமர் மோடி, அனைவருக்கும் உணவு கிடைக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில், ரேஷன் கடைகளில் அரிசி வழங்கும் போது, தி.மு.க.,வினர் அந்த அரிசியை கடத்தி, பிற மாநிலங்களுக்கு விற்று கொழுப்பது, கீழ்த்தரமானது. ரேஷன் அரிசி கடத்துவது ஆளுங்கட்சியினர் என்பதால், போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது, மேலும் பல குற்ற சம்பவங்களுக்கே வழிவகுக்கும்.

உடனே, தி.மு.க., அரசு, இந்த பாம்பு கார்த்திக் என்ற நபர் உள்ளிட்ட ரேஷன் அரிசி கடத்தல் கும்பலை சேர்ந்த அனைவரையும் கைது செய்து, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அரிசி கடத்தலை ஊக்குவிக்கும் விதமாக செயல்பட்டு, மக்களுக்கு பாதுகாப்பு இன்மையை உருவாக்கிய துாத்துக்குடி மாவட்ட தி.மு.க.,வுக்கு கடும் கண்டனம் தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.