ராமஜென்ம பூமி – பூமி பூசையை சீர்குலைக்கும் தீய சக்திகள்

வரும் ஆகஸ்ட் 5ந்தேதி அயோத்தியில் பிரம்மாண்டமான ஸ்ரீ ராமர் ஆலயம் அமைய நடக்கும் பூமி பூசையை சீர்குலைக்க அந்நிய சக்திகள் திட்டமிட்டுள்ளன.   பாகிஸ்தான் மற்றும் பங்களா தேஷ் நாட்டில் உலா வரும் பயங்கரவாத அமைப்புகள் மூலமாக தாக்குதல் நடத்த திட்டமிட்டது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.  சில தினங்களுக்கு முன் பங்களா தேஷ் நாட்டின் வெளியுறவு அமைச்சர் ஏ.கே. அப்துல் மோமன் விடுத்துள்ள அறிக்கையும்,  இந்திய உளவு துறையினரின் அறிக்கையும் சில உண்மைகளை வெளிப்படுத்தியுள்ளது.   இதில் முக்கியமான அறிக்கை பங்களா தேஷ் நாட்டின் வெளியுறவு அமைச்சரின் அறிக்கை அப்பட்டமாக இந்துக்களுக்கு எதிரான போராகவே கருத வேண்டியுள்ளது.   இவர்களுடன் சேர்ந்து கொண்டு காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களும் கூப்பாடு போடுகின்றனர்.

          வெளியுறவுத் துறை அமைச்சரின் அறிக்கையில்,  வரலாற்று சிறப்புமிக்க இந்தோ – பங்களா தேஷ் உறவுகளை கெடுக்கும் வகையில் புது டெல்லி எந்த ஒரு நடவடிக்கையும் எடுப்பதை தவிர்க்க வேண்டும்.  பங்களா தேஷ் நாட்டில் ஓரங்கட்டப்பட்ட இந்து சிறுபான்மையினர் மீது தாக்குதல் நடத்தப்படவும், வன்முறை நடத்தவும் ராம ஜென்ம பூமியில் கோவில் கட்ட பூமி பூசை செயல்பாடு  ஒரு காரணமாக அமைந்து விடக் கூடாது.   இந்த கோயில் கட்டுமானத்தின் மூலம்  உறவுகள் புண்படுத்த நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.   எங்களை போலவே இந்தியாவும்,  இந்தோ பங்களா தேஷ் நாட்டின் உறவுகளை முறிக்ககூடிய எந்த ஒரு செயலையும் அனுமதிக்க கூடாது என  தெரிவித்துள்ளார்.  இந்த செய்தியை முழு விவரமாக தி இந்து பத்திரிக்கை வெளியிட்டு தனது மதச்சார்பின்மையை வெளிப்படுத்தியுள்ளது.

          இந்தியா தனது சொந்த பூமியில் ராமார் ஆலயத்தை சட்டபூர்வமாக கட்டப்படவிருக்கிறது.   அதுவும் நீண்ட கால சட்ட போராட்டத்திலும்,  அமைதியான முறையில் நடந்த ஜனநாயக போராட்டத்தின் மூலமாகவும்  செயல்படுத்துவது எப்படி பங்களா தேஷ் நாட்டின் உறவை பாதிக்கும் என்பது புரியவில்லை.   அயோத்திக்கும் பங்களா தேஷ் நாட்டிற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.  சம்பந்தமில்லாத ஒரு விஷயத்தில் ஷேக் ஹசீனா அரசாங்கம்  ஏன் கவலை கொள்ள வேண்டும்.   ராமர் ஆலயம் அமைப்பதின் மூலம் பங்களா தேஷ் நாட்டில் உள்ள 17 மில்லியன் இந்துக்களுக்கு ஆபத்தை உருவாக்க பயங்கரவாதிகளுக்கு மறைமுகமாக  ஆதரவு தெரிவிக்கிறார் வெளியுறவுத் துறை அமைச்சர்.   1990-ல் அயோத்தியில் பிரச்னைக்குறிய கட்டிடம் இடிக்கப்பட்டதாக பொய் செய்தி வெளியிட்டு,  அக்டோபர் 30 முதல் நவம்பர் 2 வரை இந்துக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களை நினைவுப்படுத்தி அறிக்கை வெளியிட்டுள்ளார்.  இது அரசாங்கமே ஜிஹாதிகளை தூண்டிவிடுவதாக இருக்கிறது.

          பங்களா தேஷ் நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சரின் அறிக்கை கலவரத்தை தூண்டுவதாக இருந்தாலும்,  பாகிஸ்தான் அரசாங்கம் , ஐ.எஸ்.ஐ. மூலமாக லஷ்கர் மற்றும் ஜெய்ஜீ பயங்கரவாத அமைப்புகள் வழியாக  ஆகஸ்ட் ஐந்தாம் தேதி இந்தியாவில் தாக்குதல்களை நடத்தவும், குறிப்பாக காஷ்மீரில் கடுமையாக தாக்குதல்களை நடத்த உத்திரவிட்டுள்ளதாக இந்திய உளவு துறையும்,  அந்நிய நாட்டு உளவுத் துறையில் குறிப்பு அனுப்பியுள்ளன.  2005 ஜீலை மாதம் அயோத்தியில் உள்ள தற்காலிக கோயிலை தகர்க்க முயன்ற பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தை மீன்டும் நினைவு கூர்ந்து அறிக்கையை அரசிடம் சமர்பித்துள்ளனர்.

          அயோத்தியில் பூமி பூசையின் போது கலந்து கொள்ளும் தலைவர்களை கொல்ல சதி தீட்டம் தீட்டிய சம்வங்களும்,  தாக்குதல் நடத்த முற்பட்ட சம்பவங்களும் நடந்துள்ளன.  ஆகவே அனைவரும் ஒரே இடத்தில் கூடுவதால்,  பயங்கரவாதிகளின் இலக்கு தெளிவாக இருப்பதாகவும்,  பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ.யானது ஆப்கானிஸ்தானில் முழு பயிற்சி பெற்ற லஷ்கர் – இ- தொய்பாவினர் மற்றும் ஜெய்ஜீ இ முகமது  பங்கரவாதிகளை களம் இறக்க முடிவு செய்துள்ளது.  இவர்கள் சிறு குழுக்களாகவே இந்தியாவில் ஊடுருவார்கள் எனவும் உளவுத் துறை அரசுக்கு  எச்சரிக்கை செய்துள்ளது.

           உள்நாட்டிலும்,  அயோத்தியில் நடக்கும் பூமி பூசை தடுக்க காங்கிரஸ், கம்யூனிஸ்ட்கள் மற்ற மதசார்பற்ற கட்சிகளாக காட்டிக் கொள்ளுபவர்கள் நீதி மன்றத்தின் மூலமாகவும் தடுக்க முயலுகிறார்கள்.   ராகுல் காந்தியின் நெருங்கிய நன்பரும்,  அடிக்கடி மோடியின் மீது கடுமையான விமர்சனங்களை வைப்பவரும் காங்கிரஸ் கட்சியை சார்ந்த ஷகாத் கோகலே அலகாபாத் உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.  கொரான கால வழிகாட்டு நெறிமுறைகளுக்கு புறம்பாக, அயோத்தியில் பூமி பூசை நடக்கிறது, தடுக்க உத்திரவிட வேண்டும் என  தாக்கல் செய்துள்ளார்.   காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஹூசைன் தல்வாய்  ஒரு விசித்தரமான கருத்தை வெளியிட்டுள்ளார்.  சோமநாதர் ஆலயம் எழுப்ப நடந்த பூமி பூசையில் கலந்து கொள்ள நேரு மறுத்துவிட்டார்.  ஏன் என்றால் மத சார்பற்ற நாட்டின் பிரதமர் என்பதால் ஒரு மத சார்ந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மறுத்து விட்டதாக டுவிட்டர் செய்துள்ளார்.

          திருவாளர் சரத்பவர் வேறு விதமாக தனது ஆதங்கத்தை கொட்டித் தீர்த்துள்ளார்.  அரசாங்கம் எதற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்ய வேண்டும்.   கோயில் கட்டுமானத்தின் மூலம் கொரனாவை கட்டுப்படுத்த முடியுமா , தற்போதைய சூழ்நிலையில் கொரானாவை முடிவுக்கு கொண்டு முயலாமல், பூமி பூசைக்கு முக்கியத்துவம் கொடுப்பது சரியானதா என்ற கேள்வியையும் எழுப்பி, இந்துக்களின் மனதை புண்படுத்தியுள்ளார்.   மகாராஷ்ராவில் கூட்டணியில் உள்ள சிவசேனாவின் முக்கிய தலைவர்  பூமி பூசை விழாவிற்கு உத்தவ் தாக்கரேவிற்கு அழைப்பு அனுப்ப வேண்டும் என கோரிக்கை வைக்கிறார்.  தனது கூட்டணியில் உள்ள ஒரு தலைவருக்கு அழைப்பு அனுப்ப வேண்டும் என பிச்சை எடுப்பதை தடுத்து, உத்தவ் தாக்கரேவிற்கு மேற்கண்ட கேள்விகளை எழுப்பியிருந்தால் சரத் பவாரை பாராட்டலாம்.

          காங்கிரஸ் கட்சி இருதலைக் கொள்ளி எறும்பாக மாறிவிட்டது.  காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் நேரிடையாக எதிர்ப்பை பதிவு செய்யாமல், தனது தொண்டரடி பொடியாழ்வார்கள் மூலம் எதிர்ப்பை தெரிவிக்கிறார்கள்.  ஆகஸ்ட் 5ந் தேதி காஷ்மீர் மாநிலத்தின் சிறுப்பு சலுகை அரசியல் ஷரத்து 370 நீக்கம் செய்யப்பட்டு ஓர் ஆண்டு நிறைவு நாள்.  ஆகவே ஆகஸ்ட் 5ந் தேதி கருப்பு நாள் என அறிக்கை விடப்பட்டுள்ளது.   ராமர் கோயில் கட்டுமான பணிக்கு நடைபெறும் பூமி பூசை பா.ஜ.க. ஆர்.எஸ்.எஸ்.  இணைந்து நடத்தும் விழா என்றும்,  ஏற்கனவே அதாவது 1989-ல்  அடிக்கல் நாட்டப்பட்ட ஒன்றுக்கு மீண்டும் அடிக்கல் நாட்ட பூமி பூசையா என்ற கேள்வியை எழுப்பியுள்ளார்கள்..   அரசியல் தலைவர்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என்பதை மறந்து விடுங்கள்.  மரியாதா  புருஷத்தமன் ராமனுக்கு மரியாதை செலுத்தும் விதமாக எல்லா தரப்பு மக்களையும் அழைகலமே என சல்மான் குர்ஷித்  டுவிட்டரில் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.  1952லிருந்து போராட்டங்கள் நடந்த போது,  வாய் திறக்காத காங்கிரஸ் கட்சியினர் தற்போது  வாய்  திறப்பது வேடிக்கையாக இருக்கிறது.

          இடதுசாரிகளும் தங்களின் பங்கிற்கு எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும் என்ற நோக்கத்தில்,  பூமி பூசையை நேரடியாக தூர்தர்ஷன் ஒளிபரப்புவது தவறு என குறிப்பிட்டுள்ளார்கள்.  மஜ்ஜிலிஸ் கட்சியின் தலைவர் ஒவாசி,  அரசியல் சட்டப்படி பிரதமர் மத நிகழ்ச்சியில் கலந்து கொள்வது, பதவி பிரமாணத்திற்கு எதிரானது என குறிப்பிட்டுள்ளார்.  ஆனால் ஒரு விஷயத்தை மறந்து விட்டு அனைவரும் கூச்சல் போடுகிறார்கள்.   அயோத்தியில் பூமி பூசை நடத்துவது மத்திய அரசாங்கமோ அல்லது உத்திர பிரதேச அரசாங்கமோ கிடையாது.   ராமர் கோயில் கட்டுமானத்திற்காக அமைக்கப்பட்ட ஒரு டிரஸ்ட் இந்த நிகழ்ச்சியை நடத்துகிறது.  நிதி கூட பொது மக்களிடமிருந்து திரட்டப்பட்டது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.    தமிழகத்தில் கோவில் கும்பாபிஷேகம் நடைபெறும் போது முதல்வர் முதல் அமைச்சர்கள் வரை கலந்து கொள்ளும் போது ஏன் அறிக்கை விடுவதில்லை என்ற கேள்விக்கு பதில் கிடையாது.