ராணுவ இடத்தை ரூ.60 கோடிக்கு ‘ஆட்டைய’ போட்ட சிஎஸ்ஐ

ராணுவ அமைச்சகத்திற்கு சொந்தமான நிலத்தை, சிஎஸ்ஐ சர்ச் நிர்வாகம், முறைகேடாக ரூ.60 கோடிக்கு பெங்களூரு மெட்ரோ ரயில் கார்பரேஷனுக்கு விற்றுள்ளது. இது தொடர்பாக சிஎஸ்ஐ சர்ச் நிர்வாகம் மீது மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் சார்பில் போலீசில் மோசடி புகார் அளிக்கப்பட்டுள்ளது.

பெங்களூருவில் நாகாவரா வட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் வெல்லாரா ரயில் நிலையம் அமைக்க பெங்களூரு மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் நிலம் தேடி வந்துள்ளது. மெட்ரோ ரயில் பணிகளுக்காக சர்ச்சுக்கு சொந்தமான 3618 சதுர மீட்டர் நிலத்தை ஆக்கிரமித்து இருந்த ஓட்டல் மற்றும் பேக்கரி காலி செய்யப்பட்டது. அந்த நிலத்தை மெட்ரோ பணிகளுக்கு பெறுவதற்காக சர்ச் நிர்வாகத்திற்கு ரூ.60 கோடி நிவாரண தொகையாக வழங்கப்பட்டுள்ளது.

ஆனால் சர்ச் நிர்வாகம் தங்களுக்கு சொந்தமானது எனக் கூறும் நிலம், உண்மையில் பாதுகாப்பு அமைச்சகத்திற்கு சொந்தமானது. இது தொடர்பாக நிலஅளவை ஆவணங்களும் பாதுகாப்பு அமைச்சகம் சமர்பித்துள்ளது.

ஜூலை முதல் வாரத்தில் கர்நாடக மண்டல பாதுகாப்புத்துறை அலுவலகம் சார்பில் அனைத்து தேவாலய குருமார்கள் மற்றும் பெங்களூரு மெட்ரோ ரியல் கார்ப்பரேஷன் நிறுவனத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டது. அதில், “சர்ச்சுக்கு உரிமையானது என கூறப்படும் நிலம் பாதுகாப்பு துறைக்கு உட்பட்டது. இது 1865, 1884, 1898 ஆகிய ஆண்டுகளில் சர்ச் நிர்வாகிகளுக்கு குத்தகைக்கு விடப்பட்டது” என குறிப்பிடப்பட்டிருந்தது.

சிஎஸ்ஐ என்பது இந்தியாவின் 2வது பெரிய கிறிஸ்தவ தேவாலய அமைப்பு. தென்னிந்தியாவில் மட்டும் சிஎஸ்ஐ சர்ச் நிர்வாகத்திற்கு சொந்தமானதாக கூறப்படும் சொத்துக்களின் மதிப்பு ரூ.1 லட்சம் கோடி இருக்கும். இந்த அமைப்பு, பல்வேறு அமைப்புக்களிடம் இருந்து நன்கொடை மூலம் மட்டும் ஆண்டுக்கு ரூ.1000 கோடிகளை பெற்று வருகிறது. தென்னிந்தியாவில் சிஎஸ்ஐ சார்பில் 5000க்கும் அதிகமான கல்வி நிறுவனங்கள் நிர்வகிக்கப்பட்டு வருகின்றன.