யுபிஐ மூலம் பணம் செலுத்தி ரேஷன் பொருள் வாங்கலாம்: சென்னை, புறநகர் பகுதிகளில் அறிமுகம்

யுபிஐ பரிவர்த்தனை மூலம் பணம் செலுத்தி நியாயவிலைக் கடைகளில் அத்தியாவசிய பொருட்களை வாங்கும் வசதி சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் உட்பட 9 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் 34 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நியாயவிலைக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கடைகளில் தற்போது விற்பனை முனைய இயந்திரம் மூலம், ஆதாருடன் இணைக்கப்பட்ட விரல் ரேகை பதிவு அடிப்படையில் அத்தியாவசியப் பொருட்கள்வழங்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், அத்தியாவசியப் பொருட்களுக்கு ரொக்கம் தவிர்த்து, டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை மூலம்உரிய தொகையைச் செலுத்தும் வசதியை ஏற்படுத்த பல்வேறு கட்டங்களாகச் சோதனை நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, முதல் கட்டமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள 1700 நியாய விலைக்கடைகள் உட்பட தமிழகம் முழுவதும்9200-க்கும் மேற்பட்ட கடைகளில் இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கெனவே கடந்த ஜூன்மாதமே இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வர இருந்த நிலையில், பல்வேறு காரணங்களால் தள்ளி வைக்கப்பட்டு தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

எனவே, இனி பொதுமக்கள் ரேஷன்கடைகளில் உள்ள க்யூஆர் குறியீட்டைதங்கள் கைபேசியில் ஸ்கேன் செய்துதொகையைச் செலுத்த முடியும். தற்போது, பொதுவான வங்கிக் கணக்கில் பொதுமக்கள் செலுத்தும் தொகை வரவு வைக்கப்படுவதால், தேவை அடிப்படையில் இதர கடைகளிலும் விரைவில் இந்த சேவைவிரிவுபடுத்தப்படுகிறது. இது தொடர்பான விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகள் நியாயவிலைக் கடைகளில் வைக்கப்பட்டுள்ளன.