யார் காரணம்?

ஒரு பையன் 8ஆம் வகுப்பு படிக்கும்போது சிகரெட் பிடிக்கப் பழகினான். பதினொன்றாம் வகுப்பிலேயே மது அருந்தப் பழகினான். எப்படியோ தட்டுத் தடுமாறி கல்லூரிக்கு வந்தான். அங்கு சீட்டாடவும் பெண்கள் தொடர்பையும் கற்றுக் கொண்டான். இதற்கு நிறைய பணம் தேவைப்பட்டதால், பொய் சொல்லவும், திருடவும் ஆரம்பித்தான். இறுதியில் கொலைகாரனாகவும் ஆனான். கைது செய்யப்பட்டு மூன்றாண்டுகளாக கீழ் நீதிமன்றம், உயர் நீதிமன்றம் என வழக்கு நடந்தது.

இறுதியாக அவனுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. அனைத்து அப்பீல்களும் நிராகரிக்கப்பட்டு தூக்கில் படுவதற்கான நாளும் குறிக்கப்பட்டது. வழக்கம்போல, தூக்கிற்கு முன்தினம் அவனின் கடைசி ஆசை கேட்கப்பட்டது. பெற்றோரை சந்திக்க விரும்புவதாக சொன்னான். பெற்றோரும் வரவழைக்கப்பட்டனர். தாயும் தந்தையும் கதறினர். போலீஸ், வக்கீல், நீதிபதி, சாட்சிகள் என எல்லோரும் சதி செய்து அவனைத் தூக்கிற்கு அனுப்பி விட்டதாக அழுது புலம்பினர்.

மகன் அமைதியாகச் சொன்னான். “அவர்கள் காரணமில்லை, இதற்கு காரணம் நீங்கள்தான்” என்றான் பெற்றோருக்கு புரியவில்லை. அவன் விளக்கினான். “நான் ஐந்தாம் வகுப்பில் தவறு செய்தபோது ஆசிரியர் என்னை கண்டித்து அடித்தார். வீட்டில் அதை நான் சொன்னதும், நீங்கள் உறவினர்கள், நண்பர்களை கூட்டிக் கொண்டு பள்ளிக்கு வந்து ஆசிரியரையும், தடுக்க வந்த மற்ற ஆசிரியர்களையும் அடித்து மிரட்டி, போலீசிலும் புகார் கொடுத்தீர்கள். அதிலிருந்து ஆரம்பித்த வீழ்ச்சிதான் இது. இப்போது தூக்கு மேடை வரை வந்திருக்கிறது. எனது தூக்குக்கு நீங்கள்தான் காரணம்” என அழுதபபடியே சொன்னான்.

பெற்றோரும் ஆசிரியரும் கண்டித்து வளர்க்காத மாணவனை நாளை காவல்துறையும் நீதிமன்றமும் தண்டிக்கும், பெற்றோரும் பரிவும், பாசமும் பிள்ளைகளின் பண்பையும், வாழ்க்கையையும் சீரழித்து விடக்கூடாது. இதை பெற்றோரும் மாணவர்களும் உணரவேண்டும்.