முருகா சரணம்;- மகான்களின் வாழ்வில்

தமிழகத்தில் கிருபானந்தவாரியார் பற்றி தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. சிறந்த ஆன்மிகச் சொற்பொழிவாளர். அவர் பள்ளிக்கூடமே சென்றதில்லை. வீட்டிலேயே அவரது தந்தை அவருக்குப் பாடம் புகட்டினார். எட்டு வயதில் வெண்பா பாடினார். முருகப் பெருமான் மீது அசைக்க முடியாத பக்தியும் நம்பிக்கையும் உடையவர்.

அவர் சிறுவனாக இருக்கும்போது ஒரு நாள் காலில் கண்ணாடி குத்தி ரத்தம் சிந்தியது. எந்த மருந்து போட்டாலும் குணமாகாமல் அது புண்ணாகியது. காலையே எடுக்கவேண்டிய நிலை உருவாகியது. டாக்டர் ஆபரேஷனுக்கு ரூ. 500/- செலவாகும் என்றார்.

ஒரு காலை எடுப்பதற்கே இந்த மருத்துவருக்கு இவ்வளவு கொடுக்க வேண்டும் என்றால் இரண்டு கால்களை நமக்குத் தந்த முருகப்பெருமானுக்கு நான் எவ்வளவு கொடுக்க வேண்டும் என்று சிந்தித்தார். எது வேண்டுமானாலும் நடக்கட்டும்… ஆபரேஷன் தேவையில்லை என்று முடிவெடுத்தார்.

தனது வீட்டின் அருகில் உள்ள முருகன் கோயில் பிரகாரத்தை 41 நாட்கள் திருப்புகழ் பாடியவாறே சுற்றி வந்தார். புண் இருந்த அடையாளமே இல்லாமல் குணமாகியது.

ஒரு அளவுக்கு தான் நமக்கு வருகிற கஷ்டங்களை சமாளிக்க முடியும்.கையை மீறி விஷயங்கள் நடக்கும்போது  கடவுளே என்று அவனிடம் சரணடைவதைத் தவிர வேறு வழியில்லை. தன்னை நம்பியவர்களை அவரும் கைவிடுவதில்லை.

எத்தனையோ மகான்கள் இந்த ஞான பூமியில் அத்தனை பேருக்கும் நமது வணக்கங்கள்