முதல்வருக்கு கடிதம் எழுதிய சிறுமி

உத்தரப் பிரதேச மாநிலம் கன்னாஜின் சிப்ரமாவ் கோட்வாலி பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர், திருமணம் செய்து கொள்ள கட்டாயப்படுத்தி தொல்லை அளித்த நபர் மீது காவல்துறையினர் நடவடிக்கை எதுவும் எடுக்காததால் நீதி கேட்டு, அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த சிறுமி பள்ளிக்குச் செல்லும் வழியில் சக்லைன் என்ற நபர் தகாத சைகைகளை காண்பித்து தொல்லை அளித்து வந்துள்ளார். இதுகுறித்து சிறுமி தன்னுடைய குடும்பத்தினரிடம் புகாரளித்தார். சிறுமியின் குடும்பத்தினரும் அந்த நபரின் வீட்டிற்கு சென்று இதுபற்றி கேட்டுள்ளனர். ஆனால் அவரது உறவினர்கள், அந்த நபருக்கு ஆதரவாக சிறுமியை அவருக்கு திருமணம் செய்து வைக்குமாறு கூறியுள்ளனர். அந்த நபரும் அப்போதில் இருந்து தொடர்ந்து அந்த சிறுமியை திருமணம் செய்து கொள்ளுமாறு கட்டாயப்படுத்தி வந்துள்ளார். இதுகுறித்து காவல் நிலையத்தில் சிறுமியின் குடும்பத்தினர் புகாரளித்தும் அவர்கள் எந்த வித நடவடிக்கையும் எடுக்காததால், சிறுமியின் குடும்பத்தினர் முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளனர். இதன் பிறகு தற்போது கன்னாஜ் காவல் கண்காணிப்பாளர் இதுகுறித்து அவசர அவசரமாக வழக்குப் பதிவு செய்து, குற்றவாளிகளைப் பிடிக்க தனிப்படை அமைத்துள்ளார்.