மத்திய பிரதேச சட்டசபையில் இன்று நம்பிக்கை இல்லா தீர்மானம்

மத்திய பிரதேசத்தில், முதல்வர் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இந்நிலையில், இம்மாநிலத்தைச் சேர்ந்த, முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் பொதுச் செயலராக இருந்தவருமான, ஜோதிராதித்ய சிந்தியாவின் காங்கிரசிலிருந்து விலகி, பா.ஜ.,வில் சேர்ந்தார்.

சிந்தியாவின் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள், 22 பேரும், தங்கள் எம்.எல்.ஏ., பதவி யை ராஜினாமா செய்து, கவர்னர், லால்ஜி டாண்டன் மற்றும் சபாநாயகர், என்.பி.பிரஜாபதிக்கு,கடிதங்களை அனுப்பி வைத்தனர். இவர்களில், ஆறு அமைச்சர்களும் அடங்குவர். அவர்களின் ராஜினாமாவை மட்டும், சபாநாயகர் ஏற்றுக் கொண்டார்.இதையடுத்து, கமல்நாத் அரசு, பெரும்பான்மையை இழந்துவிட்டதாக கூறப்பட்டது. மொத்தம், 230 உறுப்பினர்கள் கொண்ட சட்டசபையில், இரண்டு இடங்கள் காலியாக உள்ளன.

காங்கிரசுக்கு, 113 உறுப்பினர்களும், பா.ஜ.,வுக்கு, 107 உறுப்பினர்களும் உள்ளனர். 22 எம்.எல்.ஏ.,க்களின் ராஜினாமாவால், காங்கிரசின் பலம், 91 ஆக குறைந்துவிட்டது.சட்டசபையில், நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்த வேண்டும் என, கவர்னர், டாண்டன்உத்தரவிட்டார்.

ம. பி., சபாநாயகர், பிரஜாபதி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி, ”எம்.எல்.ஏ.,க்கள் ராஜினாமா விவகாரத்தில், உடனடியாக முடிவெடுக்க முடியாது; இரண்டு வார காலம் அவகாசம் தேவை,” என்றார்.
இதற்கு, சிவராஜ் சிங் சவுகான் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் முகுல் ரோத்தஹி கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.இதன் பின் நீதிபதிகள், ‘காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுடன், ‘வீடியோ கான்பரன்சிங்’ வழியாக, சபாநாயகர் பேசலாம். இல்லாவிடில், எம்.எல்.ஏ.,க்களிடம் பேச, ஒருவரை நீதிமன்றம் நியமிக்கலாம்’ என்றனர்.

ஆனால், இதை ஏற்க, சபாநாயகர் பிரஜாபதி மறுத்துவிட்டார். இருதரப்பு வாதங்கள் நிறைவடைந்த நிலையில், நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியதாவது:ராஜினாமா கடிதங்கள், தகுதி நீக்கம் செய்ய கோரிய மனுக்கள் ஆகியவற்றின் மீது, சபாநாயகர் முடிவெடுக்காமல் இருந்தாலும், சட்டசபையில் நம்பிக்கை ஒட்டெடுப்பு நடத்துவதில், எந்தத் தடையும் இல்லை.

சட்டசபை கூட்டத் தொடர் நடக்காத நிலையில், பெரும்பான்மையை அரசு இழந்தால், உடன், சட்டசபையின் சிறப்பு கூட்டத்தை கூட்டுமாறு, சபாநாயகருக்கு உத்தரவிட, கவர்னருக்கு அதிகாரம் உள்ளது.அதனால், மத்திய பிரதேச சட்டசபையின் சிறப்பு கூட்டத்தை கூட்ட, சபாநாயருக்கு, கவர்னர் உத்தரவிட வேண்டும். சட்டசபையை இன்று கூட்டி, மாலை, 5 மணிக்குள் நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்தவும், சபாநாயகருக்கு உத்தரவிட வேணடும்.நம்பிக்கை ஓட்டெடுப்பை நேரடியாக ஒளிபரப்பவும், வீடியோ எடுக்கவும், ஏற்பாடு செய்ய வேண்டும்.
நம்பிக்கை ஓட்டெடுப்பில் பங்கேற்க, காங்கிரசின் அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள், 16 பேரும் வந்தால், அவர்களுக்கு, மத்திய பிரதேசம் மற்றும் கர்நாடக அரசுகள், போதிய பாதுகாப்பு வழங்க வேண்டும். சட்டசபை கூட்டத்தில், நம்பிக்கை ஒட்டெடுப்பை தவிர, வேறு பணிகள் மேற்கொள்ள கூடாது. இந்த விவகாரத்தில், சட்டம் – ஒழுங்கு மீறல் இருக்க கூடாது. இதை, சட்டசபை செயலர் உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.