மதசார்பற்ற துறையா?

ஹிந்து சமய அற நிலையத்துறையின் கொள்கை விளக்கத்தில் ‘மதசார்பற்ற’ என்ற வார்த்தையை நுழைத்ததுடன் ‘மத சுதந்திரம்’ என்ற வாக்கியத்தை நீக்கியும் உள்ளது தற்போது தமிழகத்தை ஆளும் தி.மு.க அரசு என்ற செய்தி பல சமூக வளைத்தளங்களில் வெளியாகிக் கொண்டுள்ளது.

இந்த செய்தி உண்மையெனில், தி.மு.க அரசு, மாற்று மதத்தவர்களின் கட்டுப்பாட்டில் ஹிந்து கோயில்களை கொண்டு செல்ல பார்க்கிறதா, ஹிந்து கோயில் சொத்தில் நடத்தப்படும் கல்வி மற்றும் இதர நிறுவனங்களில் மாற்று மதத்தவரை பின்வாசல் வழியாக நுழைக்க முயல்கிறதா, மத சுயாட்சி என்ற வாக்கியத்தை நீக்கி அரசின் கட்டுப்பாட்டில் கோயிலில் நடக்கும் பூஜை, ஆகம விதிகளில் மூக்கை நுழைக்க முயல்கிறதா? என்ற கேள்வி ஹிந்துக்களின் மனதில் எழுகிறது. இதன் உண்மைத் தன்மையை தமிழக அரசு உடனடியாக தெளிவுபடுத்த வேண்டும்.

அப்படி தி.மு.க அரசு இந்த விஷயத்தில் ஹிந்துக்களுக்கு துரோகம் செய்திருந்தால் நீதிமன்றங்கள் உடனடியாக தலையிட்டு தகுந்த நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்டவர்களை தண்டிக்க வேண்டும். இதனை தி.மு.க அரசு செய்திருந்தால், இதேபோல மாற்று மத வழிபாட்டு தலங்களின் சட்ட விதிகளிலும் ‘மதச்சார்பற்ற’ என்று சொல்லை சேர்க்க வேண்டும். அப்படி செய்ய திராணி இல்லை என்றால் ஹிந்துக்கள் மீது மட்டும் ஏன் ஓரவஞ்சனை என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.

இதை ஹிந்துக்கள் கேட்காமல் விட்டுவிட்டால் இன்னும் சில வருடங்களில் கோயில்கள் எல்லாம் ‘மதச்சார்பற்ற’ அலுவல் நிலையங்களாகவும் மாற்று மதத்தினரின் மத பிரச்சார கூடாரங்களாகவும் மாறிவிடும். இறைவனுக்காக அரசர்களும் நம் முன்னோர்களும் எழுதிவைத்த கோயில் சொத்துகள் நம் கண் எதிரிலேயே கொள்ளை போகும். ஆயிரம் ஆண்டுகளாக நாம் கட்டிக்காத்த கலாச்சாரமும் பாரம்பரியமும் காணாமல் போகும். தர்மம் காக்க இனியாவது விழிப்படைவது நம் கடமை.